தேவர் - நாடார் பிரச்னை: ஆறாம் வகுப்பு பாடப்புத்தக தகவலால்!
ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், முத்துராமலிங்க தேவர் குறித்த பாடத்தில், உண்மையான தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக, புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி பாட திட்டம் நடத்தப்படுகிறது. 6ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், 'தேசியம் காத்த செம்மல்' என்ற தலைப்பில்,
முத்துராமலிங்க தேவர் குறித்த ஒரு பாடம் இடம் பெற்றுள்ளது.
வாய்ப்பூட்டு சட்டம்
அதில், 'வடக்கே திலகருக்கும், தெற்கே முத்துராமலிங்கத் தேவருக்கும் வாய்ப்பூட்டு சட்டம் போடப்பட்டது' என, குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், பள்ளி கல்வி இயக்குனர் உள்ளிட்டோருக்கு, தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்து ரமேஷ், புகார் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது:
கடந்த, 1936ல், குறிப்பிட்ட சிலரை அடக்க, குற்ற பரம்பரை சட்டத்தை, அப்போதைய ஆங்கிலேய அரசு ஏவியது. இதை எதிர்த்து, அதே ஆண்டு அக்., 28ல், முதுகுளத்துாரில், முத்துராமலிங்கத் தேவர் தலைமையில், வேலுச்சாமி நாடார் பொதுக்கூட்டம் நடத்தினார். இதனால், கோபம் அடைந்த ஆங்கிலேய அரசு, முத்துராமலிங்கத் தேவர், கூட்டத்தில் கலந்து கொண்ட சுப்பையா பிள்ளை, முருகையா பிள்ளை, ஆதிசிவன் பிள்ளை, வேலுச்சாமி நாடார், பாலையா நாடார், சசிவர்ண தேவர் உட்பட பலருக்கு எதிராக, வாய்ப்பூட்டு சட்டத்தை பிரயோகித்தது.
ஆவணம் உள்ளது
ஆனால், முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக மட்டுமே, அந்தச் சட்டம் போடப்பட்டுள்ளது போல, பாடத்தில் குறிப்பிட்டுள்ளது தவறு. வாய்ப்பூட்டு சட்டத்தை எதிர்த்து, வேலுச்சாமி நாடார் வழக்காடினார்; அதற்கான ஆவணம் உள்ளது. எனவே, வரலாற்றை திரித்து, 6ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தகவல் தவறானது; அதை சரிசெய்ய வேண்டும். இல்லையெனில், சட்ட நடவடிக்கையில் இறங்குவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறுகையில், ''இந்த பிரச்னை தொடர்பாக, தமிழ்நாடு நாடார் சங்கத்தில் இருந்து சிலர், புகார் கடிதம் கொடுத்துள்ளனர். பாடத் திட்டங்களை முடிவு செய்வதற்காக, அமைக்கப்பட்டுள்ள குழுவை அழைத்து, இது தொடர்பாக, ஆய்வு நடத்தப்படும். தகவல்கள் தவறாக இடம் பெற்றிருந்தால், இந்த ஆண்டே சரிசெய்யப்படும்,'' என்றார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.