தேசிய வருவாய் வழி, திறன் தேர்வு'சிலபஸ்' மாற்றியதால் குழப்பம்
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வுக்கான பாடத்திட்டத்தில், திடீரென, 7ம் வகுப்பு பாடம் முழுமையும் கூடுதலாக படிக்க வேண்டும் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வுக்கு, 10 நாட்களே உள்ள நிலையில், இந்த அறிவிப்பு மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 முடிக்கும் வரை, மாதந்தோறும், 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.இதனால், ஏராளமான மாணவர்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். சில பள்ளிகளில், 8ம் வகுப்பு துவங்கியது முதல், இத்தேர்வுக்கான பயிற்சியும் சேர்த்து வழங்கப்படுகிறது.
ஜனவரி, 21ம் தேதி இத்தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. திடீரென தேர்வுத்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 8ம் வகுப்பு முதல் மற்றும் இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களுடன், 7ம் வகுப்பின் மூன்று பருவ பாடப்புத்தகங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்பதால், மாணவர்களை அதற்கேற்ப தயார் செய்யவும் என, கூறப்பட்டுள்ளது.
தேர்வுக்கு இன்னும், சில நாட்களே உள்ள நிலையில், 7ம் வகுப்பின் மூன்று பருவ பாடப்புத்தகங்களையும் படித்து பயிற்சியெடுப்பது அனைவராலும் இயலாத விஷயம். இதனால், மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:விண்ணப்பம் வெளியிடும் போது, 8ம் வகுப்பு பாடத்திட்டத்தை படித்தால் போதுமானது எனக் குறிப்பிட்டுவிட்டு, தற்போது திடீரென ஏன் மாற்றியுள்ளனர் என தெரியவில்லை. இதை முன்கூட்டியே கூறியிருந்தாலாவது மாணவர்கள் அதற்கேற்ப தயாராகி இருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.