சி.ஏ., தேர்வு: சென்னை மாணவர் முதலிடம்
கணக்கு தணிக்கை துறையின் ஆடிட்டர் பதவிக்கான, 'சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்' என்ற, சி.ஏ., படிப்பின் இறுதித்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், பல ஆண்டுகளுக்கு பின், சென்னை மாணவர், நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளார்.
கடந்த, 2015 நவம்பரில் நடந்த, சி.ஏ., இறுதித் தேர்வு முடிவுகளை, இந்திய சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் நிறுவனம், நேற்று பிற்பகலில் வெளியிட்டது. இதில், தேசிய அளவிலான முதலிடத்தை, சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ பெற்றுள்ளார். இவர், 800க்கு, 595 மதிப்பெண் பெற்று, 74.38 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு பின், சென்னையைச் சேர்ந்த மாணவர், தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். திருப்பதி மற்றும் கோல்கட்டாவைச் சேர்ந்த மாணவர்கள், 572 மற்றும், 566 மதிப்பெண்களுடன் இரண்டாவது மற்றும் மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.
'10ம் வகுப்பு தேர்வு போன்றதே!'
சி.ஏ., இறுதித் தேர்வில், தேசிய அளவில் முதலிடம் பெற்ற ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ, சென்னை, முகப்பேரில் வசிக்கிறார். இவரது தந்தை ராஜா; ஆடிட்டர்; தாய் தேவி. 2010ல், எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் பிளஸ் 2 முடித்தவர் ஜேம்ஸ்.
ஜேம்ஸ் அளித்த பேட்டி:தேர்வில் வெற்றி பெறுவேன் என நினைத்தேன். ஆனால், முதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. என் தந்தையின் ஆலோசனை, பயிற்சி மையங்களின் தொடர் பயிற்சி மற்றும் அறிவுரைகளை ஏற்று, தேர்வுக்காக கடினமாக உழைத்தேன்.
சி.ஏ., தேர்வில் வெற்றி பெறுவதற்கு பெரிய அளவில், 'ரிஸ்க்' எடுக்க தேவையில்லை.
'அக்கவுன்டன்சி'யில் ஆர்வம் வேண்டும்; தேர்வுக்கான பயிற்சி தேவை. பள்ளி பருவத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு எப்படி தயாராகிறோமோ அதே போல படித்தால் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
* நாடு முழுவதும், 42 ஆயிரத்து, 469 பேர், இந்தத் தேர்வை எழுதினர்; அவர்களில், 2,440 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* சி.ஏ., இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,440 பேரில், 520 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.