மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்அதிகாரிகளுடன் ஆலோசிக்க உத்தரவு
'அரசு அலுவலக கட்டடங்களில், மாற்றுத் திறனாளிகள் தடையின்றி சென்று வருவதற்கு, கூடுதல் வசதிகள் செய்வது குறித்து, மத்திய, மாநில பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன், ஆணையர் ஆலோசிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைப்பிடி வசதிசென்னை, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த, ராஜிவ் ராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'அரசு அலுவலக கட்டடங்கள், போக்குவரத்து கழக பஸ்களில், மாற்றுத் திறனாளிகள் ஏறி, இறங்க வசதிகள் செய்யப்படவில்லை; பல கட்டடங்களில், சாய்வு தளம், கைப்பிடி வசதி இல்லை. எனவே, மாற்றுத் திறனாளிகள், தடையில்லாமல் வந்து செல்லும் வகையில், வசதிகள் செய்ய உத்தரவிட வேண்டும்' என, கோரப்பட்டிருந்தது.
இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசின் பல துறைகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மாற்றுத் திறனாளிகளுக்கான துறையின் ஆணையர், பதில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மத்திய பொதுப்பணித் துறையின் விதிமுறைகள், பின்பற்றப்பட வேண்டும். அரசின் வெவ்வேறு துறைகளுக்கான கட்டடங்களில், அந்த விதிமுறைகளை எப்படி அமல்படுத்துவது என, பார்க்க வேண்டும்.
எனவே, மத்திய, மாநில பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆகியோருடன், மாற்றுத் திறனாளிகளுக்கான துறையின் ஆணையர் கலந்து ஆலோசிக்க, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், செயல் திட்டம் குறித்த தெளிவான நிலை எங்களுக்கு கிடைக்கும்.இறுதி வடிவம்இன்னும், 10 நாட்களுக்குள், அதற்கான கூட்டத்தை, ஆணையர் கூட்ட வேண்டும். அடுத்த விசாரணைக்கு முன், எங்களுக்கு இறுதி வடிவம் அளிக்க வேண்டும்.
அரசின் பதில் மனுவில், சாய்வு தளம் மற்றும் கைப்பிடி வசதிகள் பற்றி தான் கூறப்பட்டுள்ளது; ஆனால், விதிமுறைகளில் மற்ற அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
விசாரணை, மார்ச், 11க்கு தள்ளிவைக்கப்படுகிறது. நீதிமன்றத்துக்கு உதவ, ஆணையரும் அன்று ஆஜராக வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.