மாணவர் சாவில் மர்மம் இருப்பதாக சாலை மறியல்
டிராக்டரில் சென்ற கல்லூரி மாணவர், தவறி விழுந்து இறந்ததில், மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர், நாமக்கல் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், போடிநாயக்கன்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் சந்துரு, 19. தனியார் பாலிடெக்னிக் மாணவர். நேற்று அதிகாலை, 3 மணிக்கு செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்ற சந்துரு, செங்கல் லோடு செய்வதற்காக டிராக்டரில் சென்றுள்ளார். டிராக்டரை அதன் உரிமையாளர் குமார் ஓட்டி உள்ளார்.
தவறி விழுந்தார்: பொன்னேரி கைகாட்டி அருகே சென்றபோது, சந்துரு டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்ததில், டிராக்டரின் டயர் ஏறியது. படுகாயம் அடைந்த சந்துருவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
சாலைமறியல்: இதையடுத்து, நேற்று நாமக்கல் அரசு மருத்துவமனையில், அவரது உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக, அவரது பெற்றோர்களிடம் ஒப்புதல் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், 'உடலில் எவ்வித காயமும் இல்லாத நிலையில், சந்துரு சாவில் மர்மம் இருப்பதாக' கூறி, காலை, 11 மணிக்கு, மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி., உறுதி: சம்பவ இடத்துக்கு வந்த டி.எஸ்.பி., மனோகரன், இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, 'பிரேத பரிசோதனை அறிக்கையின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்ததை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.