5 வயதிற்கு உட்பட்ட பள்ளி குழந்தைகளை வேனில் அழைத்து வர விரைவில் தடை
பள்ளி வேன் மோதி, மூன்று வயது குழந்தை பலியானதை தொடர்ந்து, பள்ளி வாகனங்களில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை, பள்ளிக்கு ஏற்றி செல்ல விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது.சென்னை, பூந்தமல்லி அருகில், சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவரின், மூன்று வயது மகளான கவிநிலா, பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி, உயிரிழந்தார். பள்ளி வேன்களில், குழந்தைகளை அனுப்புவதும், அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கும் உதவியாளர்கள் இல்லாததும் தான், விபத்துக்கு முக்கிய காரணமாக தெரியவந்துள்ளது. இதற்கு முன்பும், இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு நேரத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை செய்து பிரச்னையை முடித்து கொள்வர். ஆனால், விபத்துகள் நடப்பது தொடர் கதையாகத்தான் உள்ளது.
இதற்கு நிரந்தர தீர்வு காண, 'ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை, பள்ளி வேன்கள், தனியார் வாகனங்களில் பள்ளிக்கு அழைத்து வர, தடை விதிக்கலாமா?' என, கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
தொடக்க கல்வி இயக்குனரகம், மெட்ரிக் பள்ளி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுடன் பேசி, இதற்கான திட்ட வரைவை கொண்டு வந்து, பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் கருத்துகளை பெற்று, நடைமுறைபடுத்த, முடிவு செய்துள்ளனர். இந்த தடை நடைமுறைக்கு வந்தால், ப்ரீ - கே.ஜி., மற்றும் எல்.கே.ஜி., வகுப்புகளில் பயிலும், குழந்தைகளை, அவரவர் பெற்றோரே, பாதுகாப்பாக தங்கள் சொந்த வாகனங்களில் அழைத்து வந்து விட வேண்டிய நிலை உருவாகும்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.