இடிந்து விழுந்தது அரசு பள்ளி மேற்கூரை அதிகாலை விபத்தால் மாணவர்கள் தப்பினர்
ராமநாதபுரம் அருகே அரசு பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதிகாலை என்பதால் மாணவர்கள் தப்பினர்.'
உத்திரகோசமங்கையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுக்கு முன் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட இங்கு 500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளியில் போதுமான கட்டட வசதி இல்லை. இதனால், 1970ம் ஆண்டில் கட்டப்பட்ட மிகவும் பழமையான கட்டடங்களில் வகுப்புகள் நடக்கிறது.
நேற்று காலை 7 மணிக்கு 6ம் வகுப்பு செயல்பட்டு வந்த கட்டடத்தின் மேற்கூரை கான்கிரீட் காரைகள் இடிந்து விழுந்தது. இதில், மாணவர்கள் அமரும் டெஸ்க் உடைந்தது. 2 மணி நேரம் தாமதமாக இந்த சம்பவம் நடந்திருந்தால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து நேர்ந்திருக்கும். காலை 7 மணிக்கு இடிந்து விழுந்ததால் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து 6வது வகுப்பு மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பறைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டனர்.'
வகுப்பறை இடிந்தது குறித்து தலைமை ஆசிரியர்(பொறுப்பு) ஜான் ஆல்பர்ட் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்கண்ணுவிற்கு தகவல் தெரிவித்தார். ஆனால், அவர் பள்ளியை நேரில் பார்வையிட வரவில்லை.
இங்குள்ள 8ம் வகுப்பு தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி வகுப்புகள் நடக்கும் பழைய ஓட்டு கட்டடங்களும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. பெரிய மழை பெய்தால் இந்த கட்டடங்கள் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டும் நபார்டு திட்டத்தில் இதுவரை கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படவில்லை. பள்ளி நிர்வாகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் தொடர்ந்து முறையிட்டும் பலனில்லை. போதிய வகுப்பறைகள் இல்லாததால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மரத்தடியில் பாடம் படிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்கண்ணுவிடம் கேட்ட போது, ' வகுப்பறை கட்டடம் இடிந்து விழுந்த தகவல் தெரியவில்லை. பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கேட்டுள்ளனர்,' என்றார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.