.
ஞாயிறு, 11 ஜனவரி, 2015
படி... படி... என்பது படிப்படியாக முன்னேறுவதற்குத் தான்...
”படி... படி... என்று கூறுவது, படிப்படியாக முன்னேறுவதற்குத் தான்,” என, சந்திராயன் திட்ட இயக்குனர், மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்பயிற்சி கல்லூரி மைதானத்தில், 48வது சென்னை புத்தக கண்காட்சி ஜன., 9ம் தேதி மாலை துவங்கியது. அதனை, சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை துவக்கி வைத்தார்.
அப்போது, அவர் பேசியதாவது: இலக்கை அடைய, திசை, வேகம், நேரம் சரியாக இருக்க வேண்டும் என்பதை, அறிவியல், இலக்கியம், ஆன்மிகம் ஆகிய அனைத்தும் சொல்கின்றன. அவற்றை புரிந்துகொள்வதில் தான், அவரவர் வெற்றி இருக்கிறது. கடந்த ஆண்டு, இதே நிகழ்ச்சியில் பேசியபோது, எழுதி வைத்து பேசினேன். இப்போது, கையில் ஒரு காகிதம் கூட இல்லாமல் பேசுகிறேன்.
காரணம், போன ஆண்டு பேசியதை, நான் அவமானமாக கருதினேன். இனிமேல், எங்கும், இப்படி தோற்க கூடாது என, தீர்மானித்தேன். அதன்பின், பேசுவதற்கும், எழுதுவதற்கும் தேவையான புத்தகங்களை படித்தேன். நாம், கோடியில் ஒருவராக இருக்க பிறக்கவில்லை. இதை, குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். அவர்களை அங்கீகரியுங்கள்.
சிறுவயதில், என் அப்பாவும், அம்மாவும் என்னோடு சேர்ந்து, அம்புலிமாமா கதைகளை படித்தனர். பின், என் வளர்ச்சியோடு சேர்ந்து, அவர்களும் படித்தனர். அப்படித்தான், எனக்குள் படிக்கும் ஆர்வம் வளர்ந்தது. நான், சாதாரண அரசு பள்ளியில், தமிழ் வழியில் படித்தவன். சந்திராயன் வெற்றிக்கு முன், அமெரிக்காவை பார்க்காதவன். அதன் பின், அமெரிக்கர்களால் பாராட்டப்பட்டவன். மாணவர்களே, உங்களை படி... படி... என கூறுவது, நீங்கள் படிப்படியாக முன்னேற வேண்டும் என்பதற்காக தான். நீங்கள் படிப்பதை, உணர்ந்து படியுங்கள். படைப்பாளர், பதிப்பாளர், வாசகர் என்ற, மூன்று கட்சி கூட்டணி அமைந்தால், நாம், நிலவை தேடி போக வேண்டாம்; அது, நம்மை தேடி வரும். இவ்வாறு, அவர் பேசினார்.
Facebook Comments
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.