ஆசிரியர்களுக்கு அவசர கதியில் 'கவுன்சிலிங்': கல்வித்துறை மீது சந்தேகம்
புதிய முதுகலை ஆசிரியர்களுக்கு, பொதுத் தேர்வு நடக்கும் நேரத்தில் அவசர அவசரமாக கலந்தாய்வு நடத்துவது, கல்வித் துறையின் மீது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், முதுகலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., போட்டித் தேர்வு நடத்தியது. இதில் தேர்வான, 1,789 பேருக்கு பணி நியமனம் வழங்குவதற்கான, 'ஆன் - லைன் கவுன்சிலிங்' நாளை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் நடக்கிறது. காவிரியின் குறுக்கே, கர்நாடகா அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை தமிழகத்தில், 'பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பஸ், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், கவுன்சிலிங்குக்கு உரிய நேரத்தில் வர முடியுமா என்று தேர்வானவர்கள் பலர் குழப்பம் அடைந்து உள்ளனர். இதற்கிடையில், கவுன்சிலிங் அறிவிப்பு குறித்து, பள்ளி ஆசிரியர்கள் பலர் கல்வித்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்வு காலத்தை காரணம் காட்டி, கடந்த, நான்கு மாதங்களாக ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், பல ஆசிரியர்கள் தாங்கள் விருப்பப்பட்ட மாவட்டத்துக்கு பணி மாறுதல் பெறுவதை, மே மாத கவுன்சிலிங்கில் பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்கின்றனர். ஆனால், அதற்கு முன் புதிய ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி, ஆசிரியர்கள் இடம் மாற திட்டமிட்டுள்ள இடத்தை நிரப்ப, கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக் கூறப்படுகிறது. இதற்கு, தமிழக மேல்நிலைப் பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.