வருமான வரி: பள்ளிகளுக்கு கெடு
வரும் 31ம் தேதிக்குள், வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், ஒரு நாளைக்கு, 20 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும்' என, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான வருமானவரிக் கணக்கை, இம்மாத இறுதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, வருமானவரித் துறை உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை கட்டுப் பாட்டிலுள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மூலம், வருமானவரிக் கணக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால், தனியார் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தங்கள் வருமானவரிக் கணக்கை, இன்னும் பள்ளிக்கல்வித் துறை மற்றும் வருமானவரித் துறையில் தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், கடைசி கட்ட பரபரப்பை தவிர்க்க, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம், எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப் பட்டு உள்ளது. அதில், 'அனைத்து அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும், தங்கள் வருமானவரிக் கணக்கை, வரும் 31ம் தேதிக்குள், வருமானவரித் துறையில் தாக்கல் செய்து, நகலை, பள்ளிக்கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யாவிட்டால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும், 20 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையை, சம்பந்தப்பட்ட பள்ளிகளே, வருமானவரித் துறையில் செலுத்த வேண்டும். இதில், கல்வித் துறை தலையிடாது' என, எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.