ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே. வாசன்
ஆசிரியர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதாவது மத்திய அரசு வழங்கியுள்ள தர ஊதியத்துடன் கூடிய ஊதியத்தை தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கிடவும், அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்கிடவும், புதிய ஓய்வூய்திய திட்டத்தை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திடவும், ஒப்பந்த அடிப்படையிலும், தொகுப்பூதிய நியமனத்திலும் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கிடவும், தாய்மொழி தமிழ்ப்பாடத்தை முதல் பாடமாக வைத்திடவும், தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கும் 14 நலத்திட்டங்களை செயல்படுத்திட தனியாக ஒரு நலத்திட்ட அலுவலரையும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வட்டார அளவில் ஒரு தனி அலுவலரை நியமித்திட வலியுறுத்தியும் போராடி வருகிறார்கள்.
ஆசிரியர்களின் பாதுகாப்பிற்காக தனியாக ஒரு சட்டத்தை தமிழக அரசு இயற்றவும், பதவி உயர்வு இல்லாமல் 30 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு 6 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கிடவும், ஆசிரியர்களை பதிவு மூப்பு அடிப்படையில் நியமித்திடவும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு உரிய காலத்தில் வழங்கிடவும், மாணவர்களின் எண்ணிக்கையை காரணம் காட்டி தொடக்கப் பள்ளிகளை மூடக்கூடாது எனவும், தமிழ் வழிக்கல்வியை நடைமுறைப்படுத்திட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்கள் ஏற்கனவே இரண்டு கட்டமாக–பேரணி ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய நிலையில் வரும் 1.8.2015 (சனிக்கிழமை) அன்று மூன்றாம் கட்ட போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனவே தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்களுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என கூறியுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.