மாவட்ட எஸ்.எஸ்.ஏ., நிதியில் பல கோடி ஊழல்?
சேலம் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், 2012-13ம் கல்வியாண்டில் துவங்கி, நடப்பாண்டு வரை நடந்துள்ள, பல கோடி ரூபாய் ஊழல் குறித்து, விஜிலென்ஸ் போலீஸார் விசாரிக்க வேண்டும்' என, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம், அரசுக்கு வலியுறுத்தி உள்ளது.
சேலத்தில், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று, கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் துவங்கியது. நாட்டாண்மை கட்டிடம் முன்பாக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில், மாவட்ட துணை செயலர் ராஜேஷ் வரவேற்றார்.
மாநில தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்து பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்காக, 2012-13ம் கல்வியாண்டு முதல், நடப்பாண்டு வரை, சர்வ சிக்ஷ (எஸ்.எஸ்.ஏ.,) அபியான் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட, 350 கோடி ரூபாயில், பெருமளவில் ஊழல் நடந்துள்ளது.
குறிப்பாக, ஏழை பெண்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளி, குறுவள மையம், வட்டார வளமைய திட்டங்களில், இந்த ஊழல் நடந்துள்ளது. இதை, வெளிச்சத்துக்கு கொண்டு வர, ஊழல் தடுப்பு சிறப்பு போலீஸார் விசாரணை நடத்த, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
ஊழலுக்கு காரணமான பணியாளர்கள் தேவகி, சசிகலா, பிரபாகரன், சுதா ஆகியோர் மீது, சட்டம் மற்றும் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைக்கு மாறாக, தொடர்ந்து, ஐந்தாண்டுக்கும் மேலாக, ஒரே இடத்தில், பணியாற்றும், நால்வரையும், உடனடியாக இடமாற்றம் செய்து, விசாரணையை துவங்க வேண்டும். இந்த கோரிக்கைக்கு, அரசு செவிசாய்க்கா விட்டால், தொடர் போராட்டம் நடத்துவதோடு, நீதிமன்றத்தில், வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உண்ணாவிரத போராட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு நிர்வாகி வள்ளிமுத்து முன்னிலை வகித்தார். திருச்சி மாவட்ட செயலாளர் விஜயகுமார், மத்திய மண்டல தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் நடந்த பல கோடி ரூபாய் ஊழல் குறித்து, விஜிலென்ஸ் போலீஸார் விசாரிக்க உத்தரவிட வேண்டும். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் எஸ்.எஸ்.ஏ., முதன்மை கல்வி அலுவலர் பதவிகளுக்கு, நிரந்தர அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை, மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வை, வெளிப்படையாக நடத்த வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.