பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவி பலி மக்கள் ஆத்திரம்; வாகனங்கள் உடைப்பு
துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி எல்.கே.ஜி., மாணவி பலியானார். ஆத்திரமடைந்த மக்கள் பள்ளியில் இருந்த வாகனங்களின் கண்ணாடிகள், வகுப்பறை ஜன்னல்களை உடைத்தனர். ரோடு மறியலில் ஈடுபட்டனர்.உடன்குடியில் சல்மா மெட்ரிக் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மருதுார்கரையை சேர்ந்த பட்டானிசெல்வம் மகள் நேகா,4, எல்.கே.ஜி., படித்து வந்தார். நேற்று பஸ்சில் பள்ளிக்கு சென்றார். காலை 8.30 மணிக்கு பஸ் டிரைவர் பரமன்குறிச்சியை சேர்ந்த கர்ணன் பள்ளியில் மாணவர்களை பஸ்சில் இருந்து இறக்கி விட்டு, பஸ்சை பின்புறமாக எடுத்தார். அப்போது பஸ்சின் பின்னால் நின்ற நேகா பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள் திரண்டு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தனர்.அங்கிருந்த பஸ், ஆம்னி வேன் கண்ணாடிகளை உடைத்தனர். வகுப்பறை ஜன்னல்களையும் உடைத்தனர். பின் உடன்குடி மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவமறிந்த திருச்செந்துார் ஆர்.டி.ஓ., தியாகராஜன், தாசில்தார் வெங்கடாஜலம், டி.எஸ்.பி.,க்கள் கனகராஜ், கோபால் ஆகியோர் ரோடு மறியல் செய்தவர்களிடம் சமரசம் பேசினர்.
சல்மா பள்ளியில் பணியாற்றும் டிரைவர்கள் அனைவரும் இளைஞர்களாக உள்ளனர். வாகனங்களை வேகமாக
இயக்குகின்றனர். வாகனங்களில் பஸ் டிரைவர் தவிர கண்டக்டர்கள் இருப்பதில்லை. வாகனங்களில் பள்ளி மாணவிகளை கண்காணிக்கும் உதவியாளர்கள் சரிவர மாணவர்களை கண்காணிப்பதில்லை, விபத்துக்குள்ளான பஸ் வாகன உரிமம் புதுப்பிக்கப்படவில்லை,என புகார் தெரிவித்தனர்.விபத்தில் பலியான மாணவி நேகாவின் பெற்றோர்களுக்கு இழப்பீடாக பள்ளி நிர்வாகம்
25 லட்சம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டனர். அதன் பின் மதியம் 12.30 மணிக்கு ரோடு மறியலை கைவிட்டனர்.பஸ் டிரைவர் கர்ணனை உடன்குடி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.