சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மழையால் இன்று 10-வது நாளாக தொடர் விடுமுறை
10-வது நாளாக விடுமுறை
மழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் (செவ்வாய்க் கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை 3 மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ளனர்.
சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தாலும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அதிர்ஷ்ட பரிசாக 10 நாட்கள் தொடர் விடுமுறையாக கிடைத்துள்ளது. இதனை மாணவர்கள் நன்றாக அனுபவித்து வருகிறார்கள்.
12-ந் தேதி முதல்
கடந்த 12-ந் தேதி கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், ஏரிகள் நிரம்பி வழிந்து வெள்ளம் ஓடுவதாலும் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டு வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் தவிர மழைக்காக மட்டும் இன்று 10-வது நாளாக தொடர்ந்து விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ விடுமுறை 10-வது நாள் என்றாலும், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய சனிக்கிழமையான 7-ந் தேதிக்கு பின்னர் பள்ளிகள் எதுவும் திறக்கப்படவில்லை. இதன்படி பார்த்தால் தொடர்ந்து 18 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறையாகிறது. சென்னையில் பள்ளிகளுக்கு இயற்கை பேரிடர்களுக்காக தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை வழங்கப்படுவது இதுவே முதல்முறை.
அதிகபட்சம் 4 நாட்கள்
இதற்கு முன்னர் 2004-ம் ஆண்டு சுனாமி தாக்குதல் ஏற்பட்டபோதும், 2005-ம் ஆண்டு புயல் மழை காரணமாகவும் தொடர்ந்து 4 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. அதனை தொடர்ந்து 2008-ம் ஆண்டு 3 நாட்களும், 2010-ம் ஆண்டு 2 நாட்களும் விடுமுறை விடப்பட்டது.
இதுதவிர 2005-ம் ஆண்டு இலங்கை தமிழர் பிரச்சினைக்காக கடுமையான போராட்டங்கள் நடந்ததால் அரசு அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை பல்கலைக்கழகமும் தொடர்ந்து தேர்வுகளை கடந்த ஒரு வாரமாக ஒத்திவைத்து வருகிறது.
சனிக்கிழமையும் இயங்கும்
இந்த விடுமுறையை ஈடுகட்டவும், எஞ்சியிருக்கும் பாடங்களை நடத்தி முடிக்கவும் வசதியாக மழைக்கு பின்னர் பள்ளி மற்றும் கல்லூரிகளை சனிக்கிழமைகளிலும் இயக்க வேண்டும் என்று உரிய நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.