மீண்டும் கனமழையா: பரவிய வதந்தியால் அதிர்ச்சி
தமிழகத்தில், 21, 22ம் தேதிகளில், பலத்த சூறாவளி காற்றுடன், 'செம' மழை பெய்யும் என, பரவிய வதந்தியால், மக்கள் பீதியடைந்தனர்.தமிழகத்தில், ஒரு வாரமாக மழை வெளுத்து வாங்கியது. சென்னை உட்பட, வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. சென்னை, புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதில், 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். மழை விட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகளில், அரசு தீவிரம் காட்டி வருகிறது.
'படிப்படியாக மழை குறையும்; உள் மாவட்டங்களில், மழை வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் ஆறுதல் அளித்துள்ளது.இந்நிலையில், '21, 22ம் தேதிகளில், புயல் மழை பெய்யும்; சென்னையை கடுமையாக புயல் தாக்கும் என, பஞ்சாங்கத்தில் பதிவுகள் உள்ளன' என தகவல் வெளியானது.
மேலும், 'எப்போதும் இல்லாத அளவில், 21, 22ம் தேதிகளில், சூறாவளியுடன், 250 செ.மீ., அளவில் கனமழை பெய்யும். பாதிப்பு கடுமையாக இருக்கும் என்பதால், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், 3,000 பேர் தமிழகத்திற்கு அனுப்பப்படுகின்றனர்' என, நாசா வெளியிட்டதாக, 'வாட்ஸ் - ஆப்' தகவல்கள் வேகமாக பரவின.ஏற்கனவே, வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், மீண்டும் பெரும் மழையா என, மக்கள் அச்சமடைந்தனர்.இதுகுறித்து விசாரித்த போது, நாசா இதுபோன்ற தகவல்கள் எதையும் அனுப்பவில்லை; வாட்ஸ் - ஆப் தகவல் தவறானது; வதந்தி தான் என, தெரியவந்தது. 'இதுபோன்ற எந்த வானிலை சூழலும் இல்லை; தகவல்கள் தவறானவை' என, வானிலை ஆய்வு மையமும் விளக்கம் அளித்துள்ளது
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.