நீர்நிலையை ஆக்கிரமித்த கல்வி நிறுவனத்துக்கு 'நோட்டீஸ்'
செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் கால்வாயை ஆக்கிரமித்து, கல்லுாரி வளாகம் கட்டிய தனியார் கல்வி அறக்கட்டளைக்கு, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளனர்.சென்னை, குன்றத்துாரை அடுத்த சிக்கராயபுரம் கிராமத்தில், தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில், பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் கல்லுாரிகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த கட்டடங்களுக்கு, சி.எம்.டி.ஏ.,விடம் முறையாக அனுமதி பெறாமல், போலி ஆவணங்களை அளித்து, அந்த அறக்கட்டளை நிர்வாகிகள் மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற முயன்றதாக புகார் எழுந்தது.ஆனால், இந்த வளாகத்தில் உள்ள கட்டடங்களை வரன்முறை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும், இந்த கட்டடங்கள் அமைந்துள்ள நிலம் நீர்நிலை என்பதில் இருந்து, நிறுவன பயன்பாட்டுக்கு வகை மாற்றம் செய்யவும் சி.எம்.டி.ஏ., முயற்சித்தது.
இந்நிலையில், போலி ஆவண புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், அறக்கட்டளை நிர்வாகிகளை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.திடீர் மாற்றம்
போலீசாரின் கைது நடவடிக்கையை அடுத்து, சிக்கராயபுரம் கல்வி நிறுவனத்தின் கட்டடங்களில் உள்ள விதிமீறல்களை குறிப்பிட்டு, சி.எம்.டி.ஏ., அமலாக்கப் பிரிவு, நோட்டீஸ் அனுப்பி உள்ளது.இது குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:சிக்கராயபுரத்தில் நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்து, வளர்ச்சி விதிகளை மீறி, கல்வி நிறுவன கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து, அந்த கல்வி நிறுவனத்திடம் உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன் துவக்கமாக, அந்நிறுவனத்துக்கு, நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இடிக்க வழி
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலெக்டர் கஜலட்சுமி, சிறப்பு அதிகாரி அமுதா ஆகியோரின் நேரடி மேற்பார்வையில், நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. இவ்வகையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, உபரி நீர் செல்லும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
சிக்கராயபுரத்தில் உள்ள கல்வி நிறுவன கட்டடங்கள், நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டவை என்றும், அந்த கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டும் என்றும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இந்நடவடிக்கைக்கு வழி விடும் வகையிலேயே, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விரைவில் சிக்கராயபுரத்தில் இடிப்பு நடவடிக்கை துவக்கப்படும் என்று கூறப்படுகிறது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.