திருப்பூர் பள்ளி மாணவன் கொலை வழக்கு சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை
திருப்பூரில், பள்ளி மாணவன் கொலை வழக்கில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசிக்கின்றனர்.
திருப்பூர் கே.வி.ஆர்., நகர் கதிரவன் மெட்ரிக் பள்ளியில், 1ம் வகுப்பு மாணவன் ஸ்ரீசிவராம், 6ம் வகுப்பு மாணவனால், கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டான். பள்ளிக்கு, 31ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்கும் போலீசார், 6ம் வகுப்பு மாணவன் மீது, இ.த.ச., 302-ன் கீழ் வழக்கு பதிந்து, ஜே.எம்., 1 மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மாணவனை பிப்., 10ல், மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
போலீசார் கூறுகையில், 'முதலில் விசாரித்தபோது, எவ்வித பதற்றமும் இன்றி, அம்மாணவன் பேசினான். ஆரம்பத்தில், தனக்கு எதுவுமே தெரியாது என்றவன், இந்தியில் பெண் போலீஸ் அதிகாரிகள் கேட்டபோது, நடந்த சம்பவத்தை கூறினான். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தும் வரை, இயல்பாக இருந்த அவன், சீர்திருத்த பள்ளிக்கு சென்றபோது, அதிர்ச்சியடைந்தான்' என்றனர்.
மூத்த வக்கீல் ஒருவர் கூறுகையில், ''வழக்கில் தொடர்புடையவன் சிறுவன் என்பதால், சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும். ஆனால், கொலை குற்றத்தை விசாரிக்க, அந்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. செஷன்ஸ் கோர்ட்டுக்கு தான் அதிகாரம் உள்ளது. குற்றப்பத்திரிக்கை தயார் செய்ததும், மாவட்ட நீதிபதிக்கு தெரிவிக்கப்படும். அவர், உயர் நீதிமன்றத்துக்கு தகவல் அளித்து, வழக்கு விசாரணை நடத்துவது குறித்து அனுமதி பெறப்படும்,'' என்றார். இவ்வழக்கில், குற்றப்பத்திரிக்கை தயார் செய்வது குறித்து போலீசார், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.