மாணவர்களை நெறிப்படுத்த நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படுமா?
வழிமாறிச் செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகள் அவசியமாக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தற்போதுள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் சுதந்திரமாக உள்ளோம் என்ற பெயரில், ஒழுக்கமின்மை, நேரம் தவறுதல், திரைப் படங்களை பார்த்து வன்முறை, பல்வேறு தீய பழக்கங்களுக்கு அடிமையாதல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.
இதனால் பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாவதுடன் அவர்களது கல்வியும் பாதிக்கப்படுகிறது.
இந்த நிலையை மாற்ற கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு நீதிபோதனை வகுப்பு என்ற சிறப்பு பாடத்திட்டம், பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு பாட வேளைகள் இதற்காக ஒதுக்கப்படும்.
இந்த பாட வேளைகளில் மாணவர்களுக்கு, நல்ல பழக்க வழக்கம் கொண்ட கதை, பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்தல், கீழ்ப்படிதல், நீதி, நேர்மை குறித்து ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தனர். நாளடைவில் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை கருத்தில் கொண்டு இதுபோன்ற பிற வகுப்புகள் கைவிடப்பட்டன.
மேலும் பள்ளிகளில் இதற்கென முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நீதி போதனை வகுப்புக்கு புதிய ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை.
இந்த நிலையில் 2014-15ஆம் கல்வி ஆண்டில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மீண்டும் நீதி போதனை வகுப்பு என்ற திட்டத்தை பள்ளி கல்வித்துறை அறிமுகப்படுத்தியது.
ஆனால் நடைமுறையில் அதை சாத்தியப்படுத்த பெரியஅளவில் கல்வித் துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் முயற்சி மேற்கொள்ளவில்லை. எனவே, இனிவரும் காலத்தில் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தனியாக ஆசிரியர்களை நியமித்து நீதி போதனை வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.