ஒப்புக்கு நடக்கும் எஸ்.எஸ்.ஏ., தேர்வு
ஆசிரியர்களின் கல்வித் திறனை சோதிக்க மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வு, கடந்தாண்டு நடத்திய அதே பள்ளிகளில் நடத்துவதால், கல்வி அதிகாரிகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட நிதியுதவியில், செயல்வழிக் கற்றல், கணினி வழிக்கற்றல் போன்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இதற்காக, தமிழகம் முழுவதும், 340 வட்டாரங்களில், வட்டார வளமையங்கள் அமைத்து, தனியாக ஆசிரியர் பயிற்றுனர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு பிரிவு வாரியாக, ஆண்டுக்கு, 10 நாட்கள் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்நிலையில், பயிற்சிக்கு ஏற்ப மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு உள்ளதா, மாணவர்கள் கற்றல் திறனை அடைந்து விட்டனரா என்பதை அறிய, ஆண்டுதோறும் தர மதிப்பீட்டு தேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி, 3, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, நாளை கற்றல் அடைவு திறன் தேர்வு நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு தேர்வு நடத்திய அதே பள்ளிகளிலேயே, இந்த ஆண்டும் குறிப்பிட்ட மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. அதனால், பெயரளவில் செயற்கையாக சில பள்ளிகளை தேர்வு செய்து, ஒப்புக்கு தேர்வு நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. ஒரே பள்ளி மாணவர்களுக்கே, ஆண்டு தோறும் தேர்வு நடத்தினால், மற்ற பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தேர்வில்லை என, எஸ்.எஸ்.ஏ., திட்டங்களை நிறைவேற்றாமல் சமாளிக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த செயற்கை தேர்வு முறையை மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.