பிளஸ்2 பொதுத்தேர்வு விடைத்தாள் முகப்பு சீட்டு தைக்கும் பணி துவங்கியது
அடுத்த மாதம் நடைபெற உள்ள பிளஸ்2 தேர்வுக்கான விடைத்தாள்களை முகப்பு சீட்டுடன் இணைத்து தைக்கும் பணி துவங்கியது. விடைத்தாள் திருத்தும் போது அரை மதிப்பெண் வழங்க தனி கட்டம் இடம் பெறுகிறது. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் முதல் வாரம் தொடங்குகிறது. இதற்கான, விடைத்தாள்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களுக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர்களின் புகைப்படங்கள், பெயர் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய முகப்பு தாள்(டாப் ஷீட்), முதன்மை விடைத்தாள் மற்றும் கூடுதல் தாள்கள் இணைத்து தைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி தலைமை ஆசிரியர்களின் பொறுப்பில் அனுபவம் மிக்க தையல்காரர்களை கொண்டு இப்பணிகள் நடந்து வருகின்றன. தையல் பயிற்சி ஆசிரியர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ், ஆங்கிலம் தேர்வுக்கு மட்டும், 30 பக்கம் கொண்ட கோடிட்ட விடைத்தாள்கள் வழங்கப்பட்டு வருகிறது. விலங்கியல், தாவரவியல் பாடத்திற்கு தனித்தனியாக தலா 22 பக்கமும், கணக்கு பதிவியலுக்கு 14 பக்கம் கோடிடப்படாத தாள் மற்றும் 15 முதல் 46 பக்கம் கொண்ட அக்கவுண்ட் பேப்பரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்கு 30 பக்கமும், பிற தேர்வுகளுக்கு தலா 38 பக்கங்கள் கொண்டதாக விடைத்தாள்கள் தைக்கப்பட்டு வருகிறது.
வரலாறு பாடத்துக்கான விடைத்தாளின் நடுவில் உலக வரைபடமும், கணிதப் பாடத்திற்கு கிராப் தாள்களும் இணைத்து தைக்கப்படுகிறது. முதல் முறையாக நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வில் முதன்மை விடைத்தாளில் அரை மதிப்பெண் வழங்க புள்ளி வைத்த கட்டம் பிரத்யேகமாக அச்சிடப்பட்டுள்ளது
|
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.