ரோடுகளில் டூ வீலரில் பறக்கும் மாணவர்கள் கடிவாளம் போடுவது யார்? விதிமுறைகளை மீறுவதால் விபத்து அபாயம்
விதிமுறைகளை மீறி, பள்ளி மாணவர்கள் ரோடுகளில் வாகனங்களை ஓட்டிச்செல்வது உடுமலை நகரில் அதிகரித்து வருவதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
உடுமலை நகர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் மூன்றும் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளும் உள்ளன. பள்ளிகளுக்கு, மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் வர அனுமதியில்லை.
இதை கண்டுகொள்ளாத பல மாணவர்கள், இரு சக்கர வாகனங்களில் வருவதையே வழக்கமாக வைத்துள்ளனர். விதிமுறை மீறல்களை தடுக்க, அரசின் சார்பிலும் கல்வித்தறையின் மூலமும், ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும், பள்ளி மாணவர்கள் விதிகளை மீறி இரு சக்கர வாகனங்களை இயக்கக்கூடாதென உத்தரவுகளும் பிறபிக்கப்படுகின்றன. கல்வியாண்டு துவக்கத்தில் மட்டுமே இவ்விதிகள் பின்பற்றப்படுகின்றன. பின்னர், பள்ளி நிர்வாகமும், மோட்டார் வாகன ஆய்வாளர்களும் கண்டுகொள்ளாமல் விடுவதால், மாணவர்கள் மீண்டும் வாகனங்களை இயக்க துவங்குகின்றனர்.
நகரில் காலை நேரத்தில் தலைக்கவசம் அணியாமல், மற்ற வாகனங்களையும் பொருட்படுத்தாமல், வாகனங்களில் விரைவாக பறக்கின்றனர் பள்ளி மாணவர்கள். மோட்டார் வாகன ஆய்வாளர்களின் மூலம் துவக்கத்தில் உள்ள கண்காணிப்பு நாளடைவில் குறைந்து, தற்போது கண்காணிப்பே இல்லாத நிலையால், மாணவர்கள் பயமின்றி வாகனங்களை இயக்குகின்றனர்.
இதில், பெரும்பான்மையாக இருப்பது, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள். 'டியூஷன் ' முடித்து, பள்ளி நேரத்துக்கு வர வேண்டும் என பல்வேறு காரணங்களை கூறி பெற்றோரும் அலட்சியமாக வாகனங்களை ஓட்ட அனுமதிக்கின்றனர். விதிகளை மீறி இம்மாணவர்கள் வாகனங்களை இயக்குவதால், மாணவர்கள் மட்டுமின்றி எதிரே வருவோர் மற்றும் அருகில் உள்ளவர்கள் என பலரும் விபத்துக்குள்ளாகின்றனர்.
தவிர, உடுமலை நகரில் நடக்கும் பாதாளச்சாக்கடை பணியால் குண்டும் குழியான ரோடுகளிலும், வேகமாக ஓட்டிச்செல்கின்றனர். நகர வீதிகளில் பல மாணவர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
கண்காணிப்பு அவசியம்
இதனைத்தடுக்க, மோட்டார் வாகன ஆய்வாளர்கள், நகர வீதிகளிலும், பள்ளிப்பாதைகளிலும், தீவிர கண்காணிப்பு நடத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.