பள்ளிகளில் பயனற்று கிடக்கும் இருக்கைகள் கண்டும் காணாமல்... அப்புறப்படுத்த தயங்கும் அரசுத்துறைகள்
உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில், பயனற்றுக்கிடக்கும் இருக்கைகளை அப்புறப்படுத்தி, புதிய இருக்கைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
உடுமலையில் துவக்கம் முதல் மேல்நிலை வரை, அரசு மற்றும் அரசு உதவிபெறும், 288 பள்ளிகள் உள்ளன. இங்கு பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளிகளில் அடிப்படை வசதிகளுள் ஒன்றான கட்டமைப்பு வசதியில், பெரும்பாலான அரசு பள்ளிகள், பின்தங்கிய நிலையிலேயே உள்ளன.
உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், மைதானம் அமைக்க இடமிருந்தும் வசதியில்லாமை, சிதிலமடைந்த கட்டடச்சுவர், சுற்றுச்சுவர் இல்லாத பள்ளிகள் என, ஒரு பக்கமும்; துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் போதியளவு வகுப்பறை வசதியில்லாமை போன்ற அவலநிலை ஒரு சில பள்ளிகளை தவிர்த்து பல பள்ளிகளிலும் தொடர்கிறது.
இதில், பள்ளியில் இருக்கும் வகுப்பறைகளையும் பயன்படுத்தமுடியாமல், வீணாக கிடக்கும், 'பென்ச்' மற்றும் இருக்கைகள் குவிந்து கிடக்கின்றன. துருப்பிடித்தும், இருக்கைகள் உடைந்தும் பயன்படுத்த தகுதியற்ற இவை, பள்ளி வளாகத்தில் உள்ள தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
இதனால், அந்த அறைகளையும் பயன்படுத்த முடியாத நிலை தொடர்கிறது. சில பள்ளிகளில் இவ்வாறு சேகரிக்கப்படும் பயன்பாடில்லாத இருக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவற்றை சேகரித்து வைப்பதற்கு ஒரு அறையே பயன்படுத்த வேண்டியுள்ளது. சில பள்ளிகளில் வகுப்பறைகள் காலியாக இல்லாததால், பள்ளி வராண்டாக்களிலும், வகுப்பறைகளுக்கு முன்புறமும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன; இதில் நகராட்சி பள்ளிகளும் அடங்கும்.
பல துவக்கப்பள்ளிகளில் போதிய வகுப்பறைகள் இல்லாததால், தலைமையாசிரியர்கள் அறைகளை வகுப்பறைகளாக பயன்படுத்துகின்றனர். பல கிராமப்புற பள்ளிகளில், இருக்கை வசதியின்றி, மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கின்றனர். இவ்வாறுள்ள பள்ளிகளுக்கு பயன்படும் வகையில், பாழடைந்த மற்றும் உடைந்துள்ள இருக்கைகளை சரி செய்து பயன்பாட்டுக்கு வழங்க, கல்வித்துறையும், நகராட்சி நிர்வாகமும் அலட்சியமாக உள்ளது.
நகரிலுள்ள ஒரு பள்ளியில், இதுபோன்ற தேவையில்லாத இருக்கைகளை வைப்பதற்கு இடமின்றி, மேல்மாடி வராண்டாவில் வைத்துள்ளனர். இவை எந்நேரமும் கீழே விழுந்து மாணவ, மாணவியருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. தவிர, துருப்பிடித்த கம்பிகள் உடைந்தும், நீண்டும் இருக்கும் இரும்பு இருக்கைகள், பள்ளி மாணவ, மாணவியரை அச்சுறுத்துகின்றன.
பத்தாண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வரும், துருப்பிடித்த, உடைந்த இருக்கைகள், வரலாற்று சின்னமாக வைப்பதற்காகவா என்ற கேள்வி எழுப்பும் வகையில், இதுவரை அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படாமலேயே உள்ளன.
அரசுப்பள்ளிகளில், பள்ளி நிர்வாகமே அனைத்து சம்பவங்களுக்கும், பொறுப்பேற்கும் நிலை உள்ளதால், இடத்தை அடைத்துள்ள தேவைற்ற இருக்கைகளை அப்புறப்படுத்த நிர்வாகத்தினர் தயக்கம் காட்டுகின்றனர். கல்வித்துறை அலுவலர்கள், அதிகாரிகள், நகராட்சி நிர்வாகத்தினர் என பலரும் பள்ளிகளில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டும், பார்வையிட்டும் செல்கின்றனர். பள்ளியின் கல்வி தரத்தை கணக்கிடும் கல்வித்துறை, அதன் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.
கல்வித்துறையும், சம்பந்தப்பட்ட அரசு துறைகளும் கண்டுகொள்ளாமல், இப்பிரச்னைக்கான தீர்வை கேள்விக்குறியாகவே வைத்துள்ளன. வகுப்பறைகளை வீணாக, அடைத்துக்கொண்டிருக்கும் தேவையில்லாத இருக்கைகளை, இருக்கை வசதியில்லாத பள்ளிகளுக்கு வழங்கும் வகையில் மாற்று ஏற்பாடு செய்யவும், தேவையில்லாத இருக்கைகளை பள்ளிகளிலிருந்து அப்புறப்படுத்தவும் கல்வித்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.