ரஷ்யாவில் கழிப்பறையை கழுவ வைத்து கொடுமை!மருத்துவ மாணவர்கள் போலீசில் புகார்
:ரஷ்யாவில், மருத்துவம் படிக்க வைப்பதாக அழைத்து சென்று, கழிப்பறை கழுவ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்ட மாணவர்கள், கோவை மாநகர போலீஸ்கமிஷனரிடம் மனு அளித்தனர்.
கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், தேனி, தஞ்சாவூர், கோவில்பட்டி ஆகிய நகரங்களை சேர்ந்த, எட்டு மாணவர்கள் தங்கள் பெற்றோருடன், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம், ஒரு புகார் மனு அளித்தனர்.
விளம்பரம் செய்தனர்:மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கோவை, ஆர்.எஸ்.புரத்தில், ஆதாம் டிரஸ்ட் ஆல்பாகன்சல்டன்சி நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தினர், பிளஸ் 2 முடித்த மாணவர்களை, ரஷ்யாவில், குறைந்த செலவில், மருத்துவம் படிக்க வைப்பதாக விளம்பரப்படுத்தினர். கடந்தாண்டு நிறுவனத்தை அணுகினோம். அப்போது, 'அட்மிஷன்' செய்ய, 25 ஆயிரம் ரூபாய் கட்ட அறிவுறுத்தினர். ஓராண்டுக்கு உதவி தொகையாக, நான்கு லட்சம் ரூபாய் செலவாகும் என்றும், நல்ல அரசு கல்லுாரியில், 'சீட்' வாங்கி தருவதாகவும் கூறினர்.
இரண்டாம் ஆண்டு வங்கி கடன் பெற வழிவகை செய்வதாகவும் தெரிவித்தனர். இதை நம்பி, அட்மிஷன் தொகையை செலுத்தினோம். பின்அவர்களது அறிவுறுத்தலின்படி, வங்கி கணக்கில், 75 ஆயிரம் ரூபாய் செலுத்தினோம்.
ரஷ்யா கிளம்பும் ஒருநாள் முன், 1.86 லட்சம் ரூபாய் கட்ட சொல்லி வாங்கினர். இதன்பின், ரஷ்யா செயின்ட் பீட்டர்ஸ் பர்க் ஸ்டேட் மெடிக்கல் பல்கலையில் சேர்ப்பதாக சொல்லி, ஒரு மட்டமான, 'டியூஷன்' சென்டரில் சேர்த்து விட்டனர். அங்கு, இரண்டு மணி நேரம் வகுப்பு நடத்திவிட்டு, ஒரு மருத்துவமனையில் கழிப்பறையை கழுவ வைத்தனர்; அறையை சுத்தம் செய்ய வைத்தனர்.
தப்பி வந்தோம்:பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டு மிரட்டினர். அங்கு தங்கியிருந்த தமிழக மக்கள் வாயிலாக, இந்திய துாதரகத்தை அணுகி, புகார் அளித்து, தப்பி வந்தோம். எங்களை போன்று பலரிடம், மருத்துவ, 'சீட்' வாங்கி தருவதாக கூறி, கோடிக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்த ஆல்பா கன்சல்டன்சியை சேர்ந்த எஸ்தர் அனிதா, ஜான்பிரிட்டோ, காமராஜ், ஆன்டனி, ஜெனிபர் ஆகியோர் மீது, நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு, புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து கேட்க, ஆதாம் டிரஸ்ட் ஆல்பா கன்சல்டன்சி நிறுவனத்தினரை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும், போனை எடுக்கவில்லை.
40 பேர் சிக்கியுள்ளனர்!:எங்களை போல் ரஷ்யாவில், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளனர். இவர்களையும் ஆல்பா கன்சல்டன்சி நிறுவனம் தான் அனுப்பி வைத்துள்ளது. அங்கு மருத்துவமனையில் கொடுமைப்படுத்தி வருகின்றனர். அவர்களை மீட்டு, ஆல்பா கன்சல்டன்சி நிறுவனத்தினர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் தப்பி வந்த மாணவர்கள்
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.