பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி கல்வி அதிகாரி மனு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான வழக்கில், கீழமை நீதிமன்றம் விதித்த 5 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய, கல்வி அதிகாரியின் மனுவை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.கும்பகோணம் கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில், 2004 ஜூலை 16 ல் தீ விபத்து ஏற்பட்டது. 94 குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர்; 18 பேர் காயமடைந்தனர். பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை, பள்ளி தாளாளர் சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையலர் வசந்தி, தஞ்சாவூர் மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் பாலாஜி, துவக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவபிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், துவக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள், கட்டட பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்து 2014 ஜூலை 30 ல் தஞ்சாவூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தண்டனையை ரத்து செய்யக்கோரி புலவர் பழனிச்சாமி, சரஸ்வதி உட்பட 10 பேர் உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தனர்.முன்னாள் மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் பி.பழனிச்சாமி, மாவட்டக் கல்வி அலுவலர் நாராயணசாமி உட்பட 11 பேரை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து அரசு, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்குகளின் மீதான விசாரணையை, ஜூன் 7 க்கு நீதிபதிகள் ஏற்கனவே ஒத்திவைத்திருந்தனர்.
சம்பவத்தின்போது மாவட்ட துவக்கக் கல்வி அலுவலராக பணிபுரிந்த பாலாஜி,68,(தற்போது பணி ஓய்வு) தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி மனு செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், ஜி.சொக்கலிங்கம் கொண்ட அமர்வு உத்தரவு:
பள்ளி அங்கீகாரத்திற்காக, மனுதாரருக்கு கீழ் பணிபுரிந்த அலுவலர்கள் ஆய்வு செய்து, 20 குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளனர். குறைகளை சரி செய்திருந்தனரா? என்பதை மனுதாரர், நேரில் ஆய்வு செய்யவில்லை. இந்நிலையில், துவக்கக் கல்வி இயக்குனருக்கு மனுதாரர் பரிந்துரைத்துள்ளார். மனுதாரர் கடமை தவறி, மெத்தனமாக செயல்பட்டுள்ளார்.
மனுதாரருக்கும், குற்றச்சாட்டிற்கும் தொடர்பில்லை என்ற முடிவிற்கு, இந்நீதிமன்றத்தால் வரமுடியவில்லை. மற்ற மனுதாரர்களின் மேல்முறையீட்டு மனு, ஜூன் 7 ல் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், மனுதாரருக்கு தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது. தள்ளுபடி செய்கிறோம் என்றனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.