நூலகத்துறை நிதியில் குளறுபடி: விசாரணைக்கு கோரிக்கை
நுாலகத்துறைக்கு மாவட்டங்கள் மூலம் அனுப்பிய நிதியில், பல குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கேள்வி மூலம் தெரியவந்துள்ளது. 'இது குறித்து, விசாரணை நடத்த வேண்டும்' என, நுாலகத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், 4,532 நுாலகங்கள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் வீட்டு வரி மீது, 10 சதவீதம் கூடுதல் வரி வசூலிக்கப்பட்டு, அவை நுாலகங்களின் செலவுகளுக்கு வழங்கப்படுகின்றன.
உத்தரவு:ஒவ்வொரு மாவட்டத்திலும் வசூலாகும் நிதியிலிருந்து, புத்தகங்கள், தளவாடங்கள் வாங்குவது, கட்டடங்கள் கட்டுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒவ்வொரு மாவட்ட நிதியும், அந்தந்த மாவட்டத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஆனால், 2009-ல், சென்னை, கோட்டூர்புரத்தில், அண்ணா நுாற்றாண்டு நுாலகம் கட்ட, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், நுாலக நிதியை அனுப்ப, பொது நுாலகத்துறை உத்தரவிட்டது.
ரூ.148 கோடி:அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் நிதி வழங்கப்பட்டுள்ளது. 2010 முதல், 2015- வரை, மாவட்டங்களிலிருந்து நுாலக நிதியாக, 148 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு உள்ளது. இதில், பல மாவட்டங்களிலிருந்தும், அண்ணா நுாலகச் செலவுக்கு அனுப்பிய கோடிக்கணக்கான ரூபாய் வரவு வைக்கப்படாமல் உள்ளது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.
பதில் தரவில்லை:இது தொடர்பாக, நுாலகத்துறையைச் சேர்ந்த கருப்பையா கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து, 7.5 கோடி; நாகை, 25 லட்சம்; நீலகிரி மற்றும் சிவகங்கை, ஒரு கோடி; தஞ்சை, 60 லட்சம்; கரூர், 30 லட்சம்; திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து, 50 லட்சம் ரூபாய், அண்ணா நுாலக செலவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியில், எவ்வளவு தொகை, எந்தெந்த மாவட்டங்களிலிருந்து பெறப்பட்டது என்ற பதிலை, நுாலக பொது இயக்குனரகம் தரவில்லை. அதேபோல், நிதி குறித்து மாவட்டங்கள் அனுப்பிய தகவலுக்கும், நுாலக இயக்குனரக தகவலுக்கும் வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக, திருவள்ளூர் மாவட்டம் சார்பில், 14.75 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக, அந்த மாவட்ட நுாலகத்துறை தெரிவித்துள்ளது.
பொது நுாலகத்துறை அளித்த தகவலில், 8.60 கோடி ரூபாய் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இப்படி பல குளறுபடிகள் உள்ளன. எனவே, நுாலக நிதி குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.