புத்தகங்கள் கிடைப்பதில் தாமதம்: பிளஸ் 1 வகுப்புகள் முடக்கம்
பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவு வெளியாகி, 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், பிளஸ் 1 புத்தகங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடைகளிலும் விற்பனைக்கு வராததால், பிளஸ் 1 வகுப்புகள் முடங்கியுள்ளன.தமிழகத்தில், 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள், மே, 25ல் வெளியாகின. மாணவர்களுக்கு தேர்ச்சி பட்டியலுடன், தற்காலிக மதிப்பெண் பட்டியலும் வழங்கப்பட்டு உள்ளது.அதனடிப்படையில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் துவங்குவதற்கான உத்தரவை எதிர்பார்த்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் சிலவற்றுக்கு மட்டும், பிளஸ் 1 இலவச புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் புத்தகம் வந்து சேராததால் யாருக்கும் வழங்காமல் உள்ளனர்.புத்தக தட்டுப்பாட்டால், பிளஸ் 1 வகுப்புகளை துவங்குவது குறித்து பள்ளிக் கல்வித் துறை இன்னும் சுற்றறிக்கை அனுப்பாமல் உள்ளதாக கூறப்படுகிறது.தனியார் மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து, இ - சேவை மையங்கள் மூலம் புத்தகங்கள் வாங்க, 'ஆர்டர்' செய்துள்ளனர். ஆனால், பாடநுால் கழகத்தில் இருந்து இன்னும் புத்தகங்களை அனுப்பவில்லை. அதனால், தனியார் பள்ளிகளிலும், பிளஸ் 1 வகுப்புகளை துவங்க முடியவில்லை.
இதுகுறித்து, தனியார் பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:பிளஸ் 1 பாடங்களை கண்டிப்பாக நடத்த வேண்டும் என உத்தரவிடும் அதிகாரிகள், அதற்கான புத்தகங்களை விரைவாக வினியோகம் செய்வதில்லை. இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
சென்னையில், பள்ளிக் கல்வித் துறை வளாக சில்லரை விற்பனை மையத்திலும் புத்தக இருப்பு இல்லை, என தெரிவித்தனர்
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.