பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் விரைவில் விநியோகம்
பிளஸ் 1பாடப் புத்தகங்கள் இந்த வார இறுதிக்குள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் நிறுவனம் அச்சிட்டு வழங்கி வருகிறது.
அதன்படி நிகழ் கல்வியாண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக 2 கோடி புத்தகங்களும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக 57.84 லட்சம் புத்தகங்களும், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்காக 83 லட்சம் புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
தனியார் பள்ளிகளுக்கான விற்பனை பிரதிகள் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை 74.6 லட்சம் புத்தகங்களும், பத்தாம் வகுப்புக்காக 17.2 லட்சம் புத்தகங்களும், பிளஸ் 2 வகுப்புக்கு 22.8 லட்சம் புத்தகங்களும் விற்பனையில் உள்ளன.
மேலும், சி.பி.எஸ்.இ மாணவர்களுக்காக 7.47 லட்சம் புத்தகங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் தமிழ்நாடு அரசு கேபிள் தொலைகாட்சியின் மூலம் அனைத்து தாலுகா தலைமையிடங்களில் செயல்படும் 285 பொது சேவை மையங்களின் மூலமும் பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிபிஎஸ்இ, மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளில் பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. சிபிஎஸ்இ பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை நிறைவு பெற்று, வகுப்புகள் தொடங்கி விட்டன. எனினும், புத்தகங்கள் வழங்கப்படாததால் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்த முடியாமல் உள்ளது. எனவே பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் விரைவாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து கல்வித்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-
பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில் முழுவதும் நிறைவு பெற்று, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த வார இறுதிக்குள் பிளஸ் 1 புத்தகங்கள் விநியோகம் தொடங்கும். அத்துடன் எந்தப் புத்தகங்கள் தீர்ந்து போயுள்ளன என்பதை சரிபார்த்துக் கூடுதலாக அவை அச்சிடப்படும் என்றனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.