உண்மைத் தன்மை அறிக்கை ஆசிரியர் ஊதிய உயர்வில் சிக்கல்
கல்வி சான்றிதழ்களுக்கான உண்மைத் தன்மை அறிக்கை பெற முடியாத ஆசிரியர்கள், ஊதிய உயர்வு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் 10 ஆண்டு பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, 20 ஆண்டு பணிபுரிந்தோருக்கு சிறப்புநிலை வழங்கப்பட்டு ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது.
பள்ளிகளில் புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறியப்பட வேண்டும். பள்ளி மதிப்பெண் சான்றிதழ் அரசு தேர்வுத்துறையிலும்,
கல்லுாரி மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பல்கலையிலும் உண்மைத் தன்மை அறிக்கை பெறப்படுகின்றன.பல ஆண்டுகளாக அரசு தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும் எந்த சான்றிதழ்களுக்கும் உண்மைத் தன்மை அறிக்கை வழங்குவதில்லை. தற்போது தேர்வுநிலை, சிறப்புநிலை ஊதிய உயர்வுக்கு ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில் கல்வி சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறிக்கை இருந்தால் மட்டுமே பட்டியலில் சேர்க்க முடியும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். இதனால் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது: தேர்வுநிலை, சிறப்புநிலை பெற உண்மைத் தன்மை அறிக்கை தேவையில்லை என, பள்ளிக் கல்வி இயக்குனரகம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் உண்மைத் தன்மை அறிக்கை இருந்தால் மட்டுமே பட்டியலில் சேர்ப்போம் என, கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் பணி நியமனம் செய்த அதிகாரிகளே கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மை அறிக்கை பெற வேண்டும். ஆனால் எங்களை வாங்க சொல்கின்றனர். அரசுத்தேர்வு துறைக்கு விண்ணப்பித்து பல ஆண்டுகளாகியும் உண்மைத் தன்மை அறிக்கை கிடைக்கவில்லை, என்றனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.