அவசர கவுன்சிலிங்கால் காலியான 300 பணியிடங்கள்....
தொடக்கக் கல்வித் துறையில் புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உருவாக்கப்பட்ட பணியிடங்கள் 'அவசர கவுன்சிலிங்' மூலம் நிரப்பப்பட்டதால் 300 பணியிடங்கள் காலியாக உள்ளன.தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 128 தொடக்க பள்ளிகள், 42 தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளின் புதிய பணியிடங்களுக்கு பணிமாறுதல் மற்றும் நியமனம் தொடர்பான 'கவுன்சிலிங்' டிசம்பர், 30ல் நடந்தது. இதற்கான தகவல் முதல் நாள் இரவு தான் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அடித்து பிடித்து கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.புதிய தொடக்கப் பள்ளிகளில் ஒரு தலைமையாசிரியர் மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு பதில் பதவி உயர்வு மூலம் தலைமையாசிரியர்கள் மட்டும் பணி நியமனம் செய்யப்பட்டனர். இடைநிலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. மேலும் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவரின் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதன் மூலம் 256 காலிப் பணியிடங்கள் தொடக்கப் பள்ளிகளில் புதிதாக ஏற்பட்டன. அதேபோல தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளில் உருவாக்கப்பட்ட பணியிடங்களை நிரப்பியதன் மூலம் பழைய இடங்களில் இருந்து பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களின் 42 பணியிடங்களும் காலியாகி உள்ளன. இவற்றை நிரப்ப இதுவரை எந்த வழிமுறைகளும் தொடக்க கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்படவில்லை. திட்டமிடல் இன்றி நடந்த 'அவசர கவுன்சிலிங்' மூலம் தேவையின்றி சுமார் 300 காலிப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் கூறியதாவது:இப்பணியிடங்களுக்கு பொது 'கவுன்சிலிங்' போல் முன்கூட்டி அறிவிப்பு செய்து நடத்தியிருந்தால் ஆசிரியர்கள் பயன் அடைந்திருப்பர். தற்போது ஏற்பட்டுள்ள 300 பணியிடங்களை எவ்வாறு நிரப்பப்படும் என்பது 'சஸ்பென்ஸாக' உள்ளது என்றனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.