பொதுத்தேர்வில் காப்பியடிக்க பெற்றோர் உதவி
பாட்னா: ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த, நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநிலத்தின், ஹாஜிப்பூர் மற்றும் வைஷாலியில் உள்ள தேர்வு மையங்களில், தேர்வெழுதும் மாணவர்களுக்கு, அவர்களுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள், விடைகளை அளித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நேற்று காலை, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குவதற்கு முன், தேர்வு அறைக்கு வந்த அதிகாரிகள், தேர்வில் காப்பி அடிப்பவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.
அராரியா டி.எம்., கூறியதாவது:
தேர்வு நேரத்தில், மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தாலோ அல்லது மொபைல் போன்களை பயன்படுத்தினாலோ, அவர்கள் கைது செய்யப்படுவர். சம்பந்தப்பட்ட தேர்வு மைய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு மைய வளாகம் மற்றும் மைதானத்தில், மாணவர்களை சேர்ந்தவர்கள் யாரும் நிற்கக் கூடாது. தேர்வு மையத்திற்குள், வெளியாட்கள் வராத வகையில் நுழைவாயிலை மூடி வைக்கவேண்டும். இவ்வாறு, அவர் உத்தரவிட்டார். ஆனால், தேர்வு துவங்கியவுடன், பல தேர்வு மையங்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மாணவர்கள் பகிரங்கமாக விடைகளை காப்பியடித்தனர். அவர்களுக்கு தேவையான விடைகளை, அவர்களுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள், தேர்வு மைய கட்டட ஜன்னல்கள் வழியாக வழங்கினர். இவை அனைத்தையும், தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் கண்டும், காணாமல் இருந்துள்ளனர்.
வைஷாலியில் உள்ள ஒரு மையத்தில், நான்கு மாடி கட்டடத்தின் மீது, உடும்பு போன்று பெற்றோர் ஏறி, தங்கள் குழந்தைகளுக்கு விடைகள் அடங்கிய தொகுப்பை வழங்கும் காட்சி, படமெடுக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவத்தில், அம்மாநில கல்வித் துறை எடுத்த நடவடிக்கை குறித்த தகவல் தெரியவில்லை.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.