52 ஆண்டுகளாகியும் தரம் உயராதஇளையான்குடி அரசு உயர்நிலைப்பள்ளி:நூறு சத தேர்ச்சி பெற்றும் பயனில்லை
இளையான்குடி அரசு உயர்நிலைப்பள்ளி 52 ஆண்டுகளாக தரம் உயர்த்தப்படாததால் மாணவிகள் மேல்நிலைப்படிப்பிற்காக வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இளையான்குடி பஸ் ஸ்டாண்ட் அருகே அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி 1963ல் துவங்கப்பட்டது. இங்கு இளையான்குடி,சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவிகள் படிக்கின்றனர். பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் இப்பள்ளி கடந்த 9 ஆண்டுகளாக தொடந்து நூறு சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது.
அடிப்படை வசதி இல்லை: இப்பள்ளியில் வடக்கு, மேற்கு, கிழக்கு பக்கத்தில் சுற்றுச்சுவர் இல்லை. தெற்கு பக்கம் மட்டும் சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. அதுவும் தற்போது பல இடங்களில் விரிசல் விட்டு சாயும் நிலையில் <உள்ளது.
நுழைவு வாயிலில் சுற்றுச்சுவர் சாயும் நிலையில் உள்ளதால், கேட்டை பூட்ட முடியாமல் திறந்து கிடக்கிறது. வாரம் ஒரு நாள் வரும் காவிரி குடிநீரை தொட்டியில் ஏற்றி குடிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். கழிப்பறை வசதியும் போதுமானதாக இல்லை. சமையல் அறை பக்கத்தில் பழைய கட்டடம் பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்து பல ஆண்டுகளாகியும், அதை இடித்து அப்புறப்படுத்தாமல் உள்ளதால், எந்த நேரத்திலும் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
இடநெருக்கடி: பள்ளியில் போதுமான வகுப்பறைகள் கட்டப்படாததால், மாணவிகள் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.பள்ளி வளாகத்தின் மேற்கு பக்கத்தில் செயல்பட்டு வந்த வட்டார வள மைய கட்டடம் பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்ததால், அங்கு செயல்பட்டு வந்த மையம் கண்ணமங்கலம் பள்ளி வளாகத்தில் கட்டடத்திற்கு மாற்றப்பட்டு சில ஆண்டுகளாக மையம் அங்கு இயங்கி வருகிறது.வளமைய கட்டடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் புதிய வகுப்பறை கட்ட வேண்டும்.
கல்வித்துறை பாராமுகம்: மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய தலைமையிடத்திலும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகிறது. ஆனால் இளையான்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி எதுவும் இல்லை. இந்த பள்ளியும் கடந்த 52 ஆண்டுகளாக தரம் உயர்த்தப்படாமல் உயர்நிலைப்பள்ளியாகவே உள்ளது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவிகள் அதிக மார்க் எடுத்தும் , இங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடம் கிடைப்பதில்லை.இப்பகுதி மாணவிகளின் நலன் கருதி,பள்ளியை தரம் உயர்த்தி அடிப்படை வசதிகளை செய்வதற்கு மாவட்ட நிர்வாகமும் , மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.