கருணைப் பணி நியமனம் விருப்பம் போல் எதிர்பார்க்க முடியாது :" உயர்நீதிமன்றம் 'கெடு'
கருணை அடிப்படையில் மனுதாரருக்கு துப்புரவுப் பணியாளர் வேலை வழங்கப்பட்டுள்ளது. இது அவருக்கு தகுதியானது இல்லை என கவுரவக் குறைவாக கருதினால் அவர் விரும்பும் ஒரு பணியை ஒதுக்க முடியாது. 30 நாட்களில் பணியில் சேர விருப்பம் தெரிவிக்க வேண்டும்,' என அவகாசம் அளித்து உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
பழநி அமுதவள்ளி தாக்கல் செய்த மனு:
என் கணவர் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பணிபுரிந்தார். பணியின் போது இறந்தார். கருணைப் பணி கோரி நகராட்சி கமிஷனர், திண்டுக்கல் பஞ்சாயத்து உதவி இயக்குனரிடம் விண்ணப்பித்தேன். துப்புரவு பணியாளர் வேலை வழங்க 2007 ல் முன் வந்தனர். நான் பணியில் சேர மறுத்தேன். என் மகனுக்கு தகுதிக்கேற்ப பணி கோரி விண்ணப்பித்தேன். இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. அப்பணி வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.வைத்தியநாதன்: மனுதாரருக்கு கருணைப் பணி நியமனம் அடிப்படையில் 2007 ல் துப்புரவு பணியாளர் பணி வழங்கப்பட்டது. மனுதாரர் பணியில் சேரவில்லை.
தற்காலத்தில் அரசுப் பணி கிடைப்பது மிகச் சிரமம். மனுதாரரின் கணவர் எந்தப் பணியில் இருந்தார் என கருத்தில் கொள்ளத் தேவையில்லை. கருணைப் பணி என்பது பணி நியமனம் கோரும் சமயத்தில் அவரது தகுதி, காலிப் பணியிடத்தை பொறுத்தே வேலை வழங்கப்படுகிறது.
மனுதாரருக்கு துப்புரவுப் பணியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. இது அவருக்கு தகுதியானது இல்லை என கவுரவக் குறைவாக கருதினால் அவர் விரும்பும் ஒரு பணியை ஒதுக்கீடு செய்ய முடியாது. அவர் அப்பணிக்குரிய தகுதியை பூர்த்தி செய்யும் வரை காத்திருக்க முடியாது.
மனுதாரருக்கு இந்நீதிமன்றம் 30 நாட்கள் அவகாசம் அளிக்கிறது. துப்புரவுப் பணியாளர் வேலையில் சேர விருப்பம்
தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அப்பணியிடம் தானாக ரத்தாகிவிடும்.
துப்புரவுப் பணியாளர் பணியிடம் தற்போது காலியாக இல்லாதபட்சத்தில் மூன்று அல்லது நான்காம் நிலை பணி வழங்க வேண்டும். பின் காலிப் பணியிடம் ஏற்படும் பட்சத்தில் துப்புரவுப் பணியாளர் பணி வழங்க வேண்டும் என்றார். மனுதாரர் வழக்கறிஞர் வேலவதாஸ் ஆஜாரானார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.