ஆசானிடம் ஆசிபெற்ற அப்துல்கலாம்:திண்டுக்கல்லில் நெகிழ்ச்சி சந்திப்பு
மாணவர்கள் நுாலகத்தை பயன்படுத்தினால் ஜெயிக்கலாம் என்று வழிகாட்டியவர்,'' எனது பேராசிரியர் சின்னத்துரை என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார்.
திருச்சி புனித வளனார் கல்லுாரியில் 1952ல் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றியவர் பாதிரியர் சின்னத்துரை,91. தற்போது அவர் திண்டுக்கல் பெஸ்கி கல்லுாரியில் தங்கியுள்ளார். அவரை நேற்று மதியம் 1.55 மணிக்கு அப்துல்கலாம் சந்தித்தார். அவரை பேராசிரியர் சின்னத்துரை சால்வை அணிவித்து வரவேற்றார்.
அப்துல்கலாமும், பேராசிரியருக்கு சால்வை அணிவித்து, தான் எழுதிய 'ரீ இக்னைட்' புத்தகம், பழங்கள் வழங்கினார். அதை பெற்ற பேராசிரியர், அப்துல்கலாமை தனது அறைக்கு அழைத்து சென்றார். அங்கு தனது குருவிடம் ஆசி பெற்ற அப்துல்கலாம் கூறியதாவது:
பேராசிரியர் சின்னத்துரை 3 மணிநேரம் அயராமல் நின்றபடி பாடம் நடத்துவார். இயற்பியலில் 4 படிநிலைகளை சொல்வார். ஐந்தாவது படிநிலையை நுாலகத்தில் படித்து தெரிந்து கொள்ளும் படி சொல்வார். மறுநாள் படித்ததை கேட்டு விளக்கம் அளிப்பார். சந்தேகம் கேட்டால், புத்தகங்களின் பெயர், அதன் பக்கங்களை தெரிவித்து, படித்து வாருங்கள் என்பார்.
நுாலகத்தை பயன்படுத்தினால்தான் எதிலும் தெளிவு பெறலாம் என்பார். அணுகுண்டு வெற்றிக்கு இந்த ஆசானே காரணம், என்றார்.பேராசிரியர் சின்னத்துரை, “அப்துல்கலாம் எவ்வளவு உயரமான பதவிக்கு ெசன்றாலும் என்னிடம் எப்போதும் அன்பும், மரியாதையும் காட்டுகிறார். ஆண்டுகள் அறுபது கழிந்த பின்பும் ஆசிபெறும் அப்துல்கலாம் போன்ற மாணவர் கிடைத்தது நான் செய்த பாக்கியமே,” என்றவர் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
மதியம்2.20 மணிக்கு அப்துல்கலாம் மதுரை புறப்பட்டு சென்றார். பெஸ்கி கல்லுாரி பொறுப்பாளர் லியோ தாகூர், பாதிரியார்கள் லாரன்ஸ், ஜோமைக்கேல், பாதிரியார் பயிற்சி மாணவர்கள் உடனிருந்தனர்.
தடுமாறிய பேராசிரியரைதாங்கிப்பிடித்தார் கலாம்:திண்டுக்கல் வரும்போதெல்லாம் அப்துல்கலாம் தனது பேராசிரியர் சின்னத்துரையிடம் ஆசி பெற தவறுவதில்லை. ரம்ஜான் நாளான நேற்று தான் எழுதிய புத்தகத்தை வழங்கி ஆசிபெறுவதற்காகவே திண்டுக்கல் வந்தார். வரவேற்பின்போது, பேராசிரியர் நடக்க முடியாமல் தடுமாறினார். அவரது கரத்தைப் பற்றி, கைத்தாங்கலாக அறைக்கு அழைத்துச் சென்றார் அப்துல்கலாம்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.