துப்புரவாளர்களுக்கு 30 மாத சம்பளம் 'கட்': பள்ளிகள் நாற்றமெடுக்கும் அபாயம்
மாதம், 100 ரூபாய் சம்பளத்தில், அரசுப் பள்ளிகளை சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு, 30 மாதங்களாக, ஊதியம் கிடைக்காததால், கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியை ஓரங்கட்ட, தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
மாத ஊதியம்:தமிழக அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, துப்புரவுப் பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு, மாத ஊதியமாக, சில ஒன்றியங்களில், மாதம், 1,250 ரூபாயும், மற்ற ஒன்றியங்களில், 600, 400, 100 மற்றும், 60 ரூபாய் என்ற அளவில் வழங்கப்படுகிறது.
அச்சம்:தொடர்ந்து, 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் இவர்களுக்கு, தமிழக அரசு
இதுவரை ஊதிய உயர்வும், பணி நிரந்தரமும் வழங்கவில்லை. கடந்த, 2010ல், அனைத்துப் பகுதி நேர துப்புரவாளர்களும், நிரந்தரம் செய்யப்பட்ட நிலையில், தொடக்கப்பள்ளி துப்புரவாளர்கள் மட்டும், இன்னும் பணி நிரந்தரமோ, ஊதிய உயர்வோ கிடைக்காமல், இன்னலுக்கு ஆளாகி
யுள்ளனர். இருக்கும் வேலையும் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில், அவர்கள் தங்கள் வேலையைத் தொடர்கின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில், சில ஒன்றியங்களில், 13 மாதங்கள், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில், 30 மாதங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில், 16 மாதங்கள், நாகை மாவட்டத்தில், 17 மாதங்களாக, துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. எந்த பலனும் இல்லைஇதனால், பணியாளர்கள் பலர், ஆசிரியர்களிடம் கையேந்தி, தங்கள் அன்றாடப் பிழைப்பை நடத்துகின்றனர்.
கல்வித்துறை முதன்மை செயலர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் இளங்கோவன்
ஆகியோரை பலமுறை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தும், தபாலில் மனு அனுப்பியும், எந்தப் பலனும் இல்லை. இந்த விஷயத்தில், ஊரக வளர்ச்சித்துறை தான் முடிவெடுக்க வேண்டும் என, கல்வித்துறையும், கல்வித்துறை விவகாரங்கள் தங்களுக்கு தெரியாது என, ஊரக வளர்ச்சித் துறையும் மாற்றி, மாற்றி கண்ணாமூச்சி ஆடுவதால், துப்புரவு ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
இதே நிலை நீடிப்பதால், ஒட்டு மொத்தமாக துப்புரவுப் பணியை புறக்கணிக்க, பள்ளி துப்புரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால், பள்ளி மற்றும் பள்ளி வளாகங்கள் நாற்றமடிக்கும் அபாயம் உள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.