பேராசிரியைக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பிய மாணவர்கள்: உயர்நீதிமன்றம் வேதனை
திருச்சி அரசு சட்டக் கல்லுாரி பேராசிரியைக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பிய மாணவர்களை நீக்கம் செய்ததை எதிர்த்து தாக்கலான மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை, மாணவர்கள் நடத்தை குறித்து வேதனை வெளிப்படுத்தியது.
திருச்சி அரசு சட்டக் கல்லுாரி பெண்கள் விடுதியில் சில மாணவிகள் அலைபேசியை தவறாக பயன்படுத்தியதாக பெண் வார்டன் சோதனை நடத்தினார். இதைக் கண்டித்து மாணவர்கள் போராடினர். முன்னின்று போராட்டம் நடத்தியதாக பி.ஏ.,-பி.எல்., மூன்றாம் ஆண்டு படிக்கும் சிவகுரு, சரவணபவா, பழனிச்சாமி, திருமணியை கல்லுாரியிலிருந்து நீக்கி மார்ச் 6 ல் முதல்வர் உத்தரவிட்டார். சிவகுரு உட்பட 4 பேர்,'முதல்வரின் உத்தரவை ரத்து செய்து, கல்லுாரியில் தொடர்ந்து படிக்க அனுமதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தனர்.நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.
முதல்வர்,''சோதனை நடத்திய கல்லுாரி விடுதி வார்டனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.,கள் அனுப்பியது சைபர்கிரைம் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மாணவிகளுக்கு மனுதாரர்கள் அலைபேசி வாங்கி கொடுத்துள்ளனர். மனுதாரர்களுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பளித்தோம். புகார் நிரூபணமானதால் நடவடிக்கை எடுத்தோம்,'' என பதில் மனு செய்தார்.
நீதிபதி: வழக்கறிஞர்கள் எனில் முன்பு சமூகத்தில் மிகப்பெரிய மரியாதை இருந்தது. ஒரு சமயம் என் தந்தை சென்னைக்கு டிராம் வண்டியில் பயணம் செய்தார். அதில் முதியவர், இளைஞர் பயணம் செய்தனர். முதியவர், ''நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்,'' என்றார். இளைஞர்,''வழக்கறிஞர்,'' என்றார். முதியவர் இருக்கையிலிருந்து எழுந்து வழக்கறிஞரை அமர வைத்தார். இதை என் தந்தை தெரிவித்தார். இந்நிலை மீண்டும் திரும்புமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.காந்தி, நேரு, அம்பேத்கர் போன்ற தலைவர்கள் வழக்கறிஞர்கள்தான். சுதந்திரத்திற்கு பாடுபட்ட அவர்கள், நீதியை நிலைநாட்ட வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். இதுபோல் பல வழக்கறிஞர்கள் நாட்டிற்காக தியாகம் செய்துள்ளனர்.
எதிர்காலத்தில் வழக்கறிஞர்களாக வரக்கூடிய மனுதாரர்கள், கடவுளுக்கு நிகராக கருதப்படும் ஆசிரியருக்கு அதாவது பெண் பேராசிரியைக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.,கள் அனுப்பியது வருத்தத்திற்குரியது.இந்து மத நுால்கள், குரான், பைபிளில் பெண்களைப் பற்றி உயர்வாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல் பெற்றோர், ஆசிரியர், மாணவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நம் நடவடிக்கை, எண்ணம், செயல், அறிவு, கீழ்படிதல், பெற்றோருக்கு செய்யும் கடமை, ஏழைகளுக்கு உதவி செய்வது போன்ற செயல்கள் பிறர் வியக்கும் வகையில் இருக்க வேண்டும். இதைத்தான் திருவள்ளுவர், 'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என் நோற்றான்கொல் எனும் சொல்,' என திருக்குறளில் தெரிவித்து உள்ளார்.
கல்லுாரி நிர்வாகத்தை பொறுத்தவரை முறையாக விசாரித்து மனுதாரர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. இவ்வழக்கில் மனுதாரர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கலாம். அவர்களின் பெற்றோர் நிலை கருதி அபராதம் விதிக்க விரும்பவில்லை. மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றார். அரசு வழக்கறிஞர் ஆனந்தராஜ் ஆஜரானார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.