துறை தலைவர் மாற்றத்தால் சென்னை பல்கலையில் மீண்டும் குழப்பம்
சென்னை பல்கலையில், 17 பேராசிரியர்கள் நியமனத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவுக்கு வந்துள்ள நிலையில், அரசியல் அறிவியல் துறை தலைவர், திடீரென மாற்றப்பட்டது சர்ச்சையை பலத்த ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறையின் தலைவர், பேராசிரியர் ராமு மணிவண்ணன். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு பணியாற்றினார். அவரை திடீரென மாற்றி விட்டு, கோடீஸ்வர பிரசாத் என்பவர், அரசியல் அறிவியல் துறைக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பல்கலையின் பதிவாளர் டேவிட் ஜவகர் பிறப்பித்துள்ளார்.பேராசிரியர் ராமு மணிவண்ணன் நீக்கப்பட்டதற்கு, அரசியல் அறிவியல் பிரிவின் சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மூன்று நாட்களாக பல்கலை துணைவேந்தர் அலுவலகம் முன் போராட்டம் நடத்துகின்றனர்.
இதுகுறித்து விசாரித்தபோது, பல்கலையில் நிர்வாகத்துக்கு எதிராக, பேராசிரியர் மணிவண்ணன், மாணவர்களை துாண்டிவிட்டு, போராட வைப்பதாகப் புகார் எழுந்துள்ளது. சமீபத்தில், மதுவிலக்கு கோரி, சென்னைப் பல்கலை வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு, பேராசிரியர் மணிவண்ணன்தான் காரணம் என்றும் பல்கலை நிர்வாக தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பேராசிரியர் மணிவண்ணனிடம் கேட்ட போது, ''மாணவர்களின் போராட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஒரு காரணமும் இல்லாமல், துறைத் தலைவர் பொறுப்பிலிருந்து என்னை நீக்கி இருக்கின்றனர். இது, தனிப்பட்ட முறையில் என்னை பழிவாங்கும் நடவடிக்கை,''என்றார்.
சென்னை பல்கலையில், 17 புதிய பேராசிரியர்கள் நியமிப்பதில், பேராசிரியர்களுக்கு இடையே சில மாதங்களாக பிரச்னை இருந்தது. சமீபத்தில்தான் அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. இப்போது, மீண்டும் ஒரு புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளதால், சென்னை பல்கலையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.