அரசு பணியில் 'டபுள் ஆக்டிங்'முன்ஜாமின் கோரி வழக்கு
ஒருவரே, இருவராக நடித்து, அரசு துறையில், இரண்டு அலுவலகங்களில் பணி புரிந்தது அம்பலமாகி உள்ளது. போலீசுக்கு பயந்து, நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரியதால், இந்த மோசடி தெரிய வந்துள்ளது.சென்னை, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ்; சென்னையில், அரசு தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையில், அலுவலக உதவியாளராக, 2012 முதல் பணியாற்றி வருகிறார்.
இவர், மூர்த்தி என்ற பெயரில், சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில், துப்புரவு தொழிலாளியாகவும் பணி புரிந்துள்ளார். இரண்டு அலுவலகங்களில், வெவ்வேறு பெயர்களில் பணிபுரிந்து, மாத சம்பளமும் பெற்றுள்ளார். 'ஒரே நபர், இரண்டு பெயர்களில் பணியாற்றுகிறார்' என, ஸ்டான்லி ஊழியர் சங்கம் சார்பில், 2014ல், புகார் தெரிவிக்கப்பட்டது. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலர் மூலம், கோட்டை போலீஸ் நிலையத்தில், உடனடியாக புகார் செய்யப்பட்டது.
தற்போது, இப்புகார் குறித்து, போலீசார் விசாரணை நடத்த களமிறங்கியதால், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கருதிய ரமேஷ், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், முன் ஜாமின் கோரி, கடந்த வாரம் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு, விசாரணைக்கு வந்த போது தான், புகார் மீது வழக்கு பதிவு செய்யாதது தெரிய வந்தது.
இதுகுறித்து, நீதிபதி கேள்வி எழுப்பி விசாரணையை தள்ளி வைத்தார்.
உடன், நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெகன், 'புகார் கொடுத்தும், வழக்கு பதிவு செய்ய, தாமதம் செய்வது ஏன்? உடனடியாக, வழக்கு பதிவு செய்யுங்கள்' என, போலீசாருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து, தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்ஜாமின் மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.