அரசு பள்ளியில் மாணவர்கள் கோஷ்டி மோதல் பொதுமக்கள் மீது தடியடி; ஜீப் மீது கல்வீச்சு
வழக்கு பதிவு
அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், ஆசிரியர்களும், மாணவர்களும் காயமடைந்தனர். பள்ளியை முற்றுகையிட்ட கிராம மக்களை, போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
கடலுார் அருகே, திருவந்திபுரம் மற்றும் பில்லாலி கிராம மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. திருவந்திபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் இந்த இரு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், சில ஆண்டுகளாகவே மோதி வருகின்றனர்.
கடந்த, 14ம் தேதி பில்லாலியைச் சேர்ந்த, பிளஸ் 2 மாணவர்கள் இருவரை, திருவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த, ஐந்து மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். நேற்று காலை, 9:00 மணிக்கு, பில்லாலியைச் சேர்ந்த மாணவர்களுடன், கிராம மக்களும் பள்ளிக்கு வந்தனர். மாணவர்களை மட்டும் பள்ளிக்குள் அனுமதித்த போலீசார், கிராம மக்களை திருப்பி அனுப்பினர். உள்ளே சென்ற மாணவர்கள், திருவந்திபுரம் மற்றும் சாலக்கரை பகுதி மாணவர்களைத் தாக்கினர்; தடுக்க முயன்ற ஆசிரியர்களும் தாக்கப்பட்டனர்; தலைமை ஆசிரியர் சுப்ரமணி, 57; உதவி தலைமை ஆசிரியர் சித்ரா, 54; ஆகியோர் மயங்கி விழுந்தனர்.
அவர்களும், ஆறு மாணவர்களும் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
சம்பவத்தை கண்டித்தும், சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், திருவந்திபுரம் மக்கள், கடலுார் - திருவந்திபுரம் சாலையில் மறியல் செய்தனர். தங்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு, பாலுார் சாலையில் பில்லாலி மக்கள் மறியல் செய்தனர். இருதரப்பு மக்களிடமும் அதிகாரிகள் தனித்தனியே பேச்சு நடத்தினர்.
மனு
மோதல் சம்பவம் குறித்து, பள்ளியில் சி.இ.ஓ., பாலமுரளி விசாரணை மேற்கொண்டார். மாணவர்களுக்குள் பிரச்னையை துாண்டிவிடும் ஆசிரியரை, இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, திருவந்திபுரம் மக்கள் மனு கொடுத்தனர். பில்லாலியைச் சேர்ந்த, ஏழு மாணவர்கள் உட்பட, 12 மாணவர்களை, காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல போலீசார் முயன்றனர். போலீஸ் ஜீப்களை திருவந்திபுரம் மக்கள் தடுத்து நிறுத்தி, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
அவர்களை தடியடி நடத்தி, போலீசார் விரட்டினர். அங்கிருந்து புறப்பட்ட ஜீப் மீது, கிராம மக்கள் சரமாரியாக கற்களை வீசி தாக்கினர்.
மதியம், 12:45 மணிக்கு, பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்றும் (18ம் தேதி) பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பதற்றம் நிலவுவதால், திருவந்திபுரம் மற்றும் பில்லாலி பகுதியில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.