வேகம் காட்டும் தனியார் பள்ளி வாகனங்களால் விபத்து அபாயம்:மாணவர்களுக்கு ஆபத்து
பழநியில் சில தனியார் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாததுடன், வேகக் கட்டுப்பாட்டு கருவியும் இல்லாமல், ஏர் ஹாரன்களை பயன்படுத்தி இயங்குவதால் மாணவர்கள் பாதிக்கப்படும் ஆபத்துள்ளது. அரசு உதவிபெறும், தனியார் பள்ளி பஸ், வேன் போன்ற வாகனங்களுக்கு அவசரவழி மற்றும் வேகக்கட்டுப்பாட்டு கருவிபொருத்த வேண்டும் என்பது உள்பட பல விதிமுறைகள் உள்ளன. கல்வி ஆண்டு துவக்க காலத்தில் ஒரேஇடத்திற்கு வாகனங்களை வரவழைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது குறைகளை கண்டறிந்து நோட்டீஸ் தருகின்றனர்.
அதன்பின் தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பழநி பகுதியில் சில தனியார் பள்ளி வாகனங்கள் தங்கள் இஷ்டத்திற்கு இயங்குகின்றன. வேகக் கட்டுப்பாட்டு கருவி இல்லாமல் போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் வேகமாக செல்கின்றன. உரிய ஆவணங்கள் இல்லாமலும், போதிய அனுபவம் இல்லாத டிரைவர்களை வைத்தும் வாகனங்களை இயக்குகின்றனர்.
அதிக ஒலிஎழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்துவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். ஆகையால் போக்குவரத்துறை அதிகாரிகள் மாதம் ஒருமுறை மாணவர்களை ஏற்றிச்செல்லும் பள்ளி வாகனங்களை திடீர் ஆய்வு செய்து குறைபாடுகள் உள்ள பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.
பழநி மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி கூறுகையில்,"" திடீர் சோதனைகள் செய்து விதிமுறைகளை பின்பற்றாத தனியார் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.