கன்னியாஸ்திரிகளுக்கு வருமான வரி உண்டா: வருமான வரித்துறை நடவடிக்கைக்கு தடை
கல்லுாரியில் பணியாற்றும் கன்னியாஸ்திரிகளிடம், வருமான வரி பிடித்தம் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.சென்னையில் இயங்கி வரும், ஸ்டெல்லா மேரிஸ் கல்லுாரியின் செயலர் சூசன் மைக்கேல் தாக்கல் செய்த மனு:எங்கள் கல்லுாரி, கிறிஸ்தவ மத கல்வி நிறுவனமாக இருந்தாலும், அனைவருக்கும் கல்வி போதிக்கிறோம். இந்தியாவில் புகழ் பெற்ற கல்லுாரி இது. 103 ஆசிரியர்கள்; 91 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 73 ஆசிரியர்கள் மற்றும், 28 ஊழியர்கள், அரசின் மானியம் மூலம் சம்பளம் பெறுகின்றனர். மற்றவர்களுக்கு, கல்லுாரி நிர்வாகம் சம்பளம் வழங்குகிறது.
கல்லுாரியில், கன்னியாஸ்திரிகளும் பல நிலைகளில் பணியாற்றுகின்றனர். கல்லுாரி முதல்வராக டாக்டர் ஜெசிந்தா மற்றும் இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், ஊழியர் என, ஏழு கன்னியாஸ்திரிகள் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்காக அரசு வழங்கும் சம்பளத்தை, தனிப்பட்ட வருமானமாக கருதி, செலவு செய்வது இல்லை. அந்த பணம், கன்னியாஸ்திரிகளின் அமைப்புக்கு செல்கிறது.
அந்த அமைப்பு, சமூக நோக்கத்துக்காக செலவிடுகிறது. கன்னியாஸ்திரிகள் ஆற்றும் சேவைக்கு, பணம் பெறுவதில்லை. அதனால் தான், வருமான வரி வரம்புக்குள், அவர்களின் சம்பளத்தை கொண்டு வரவில்லை. வருமான வரி பிடித்தம் செய்வதில்லை.பல ஆண்டுகளாக, இந்த விதி விலக்கு உள்ளது.
இந்நிலையில், கன்னியாஸ்திரிகளுக்கான சம்பளத்தில், வருமான வரி பிடித்தம் செய்யும்படி, கல்லுாரி கல்வி இணை இயக்குனரகம் வலியுறுத்துகிறது.
அவர்களுக்கு அளிக்கப்படும் வரி விலக்கு, ரத்து செய்யப்படவில்லை; வாபஸ் பெறப்படவும் இல்லை.எந்த சந்தர்ப்பமும் வழங்காமல், வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் அலுவலகம் மற்றும் கருவூல கணக்கு துறை இயக்குனர் பிறப்பித்த உத்தரவுகளுக்கு, தடை விதிக்க வேண்டும்; அவற்றை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், வழக்கறிஞர் காட்ஷன் சுவாமிநாத் ஆஜராகினர்.
மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், 'தற்போதைய நிலை தொடர வேண்டும்' என, இடைக்கால உத்தரவிட்டார்.இதேபோல், கோவையை சேர்ந்த, நிர்மலா கல்வி அமைப்பு தொடர்ந்த மனுவையும் விசாரித்த நீதிபதி மகாதேவன், 'தற்போதைய நிலை தொடர வேண்டும்' என, உத்தரவிட்டார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.