செவ்வாய்க்கிழமை முதல் மழை, படிப்படியாக குறையும் வானிலை மையம் தகவல்
செவ்வாய்க்கிழமை முதல் மழை படிப்படியாக குறையும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் தென்மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
இன்று கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்றும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-
கடலோர மாவட்டங்களில் மழை
நேற்று முன்தினம் லட்சத்தீவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. பதிவு செய்த மழையின் அடிப்படையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது.
லட்சத்தீவில் நிலைகொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும். உள்மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் குன்னூர், கோவை, வால்பாறை, தேனி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
செவ்வாய்க்கிழமை முதல் மழை குறையும்
தமிழ்நாட்டில் வரும் செவ்வாய்க்கிழமை முதல் மழையின் அளவு படிப்படியாக குறையும்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரைக்குள் பெய்ய வேண்டிய சராசரி மழை 44 செ.மீ. ஆகும். ஆனால் இதுவரை 39.6 செ.மீ. மழை பெய்துள்ளது. எனவே விரைவில் சராசரி அளவை எட்டிவிடும்.
இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
14 செ.மீ. மழை
குன்னூர் 14 செ.மீ., ஆவடி, கேத்தி தலா 12 செ.மீ., பூண்டி, பூந்தமல்லி தலா 10 செ.மீ., காட்டுக்குப்பம் 9 செ.மீ., கோத்தகிரி, திருமயம், சிவகிரி, திருத்தணி 8 செ.மீ., குந்தாபாலம், திருமங்கலம், பெரியகுளம், புதுச்சேரி, தம்மம்பட்டி தலா 7 செ.மீ.,
தேவகோட்டை, கூடலூர், காவேரிப்பாக்கம் தலா 7 செ.மீ., பெரியாறு, செம்பரம்பாக்கம், தாமரைப்பாக்கம், ராஜபாளையம், இலுப்பூர், அரிமளம் தலா 6 செ.மீ.,
ஸ்ரீபெரும்புதூர், மேலணைக்கட்டு, வெம்பாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, குடவாசல், திருப்புவனம், செங்கல்பட்டு, ஊட்டி, சென்னை விமானநிலையம், நடுவட்டம் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.
நுங்கம்பாக்கம்
மேலும் சென்னை நுங்கம்பாக்கம் உள்பட பல இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதுதவிர 70-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை குறைந்த அளவு பதிவாகி உள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.