கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு
2016–2017–ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:–
கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.86 ஆயிரத்து 193 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் 10–வது மற்றும் பிளஸ்–2 தேர்ச்சி விகிதமும் அதிகரித்தது. தற்போது இடைக்கால பட்ஜெட்டில் ரூ.24 ஆயிரத்து 820 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இடைக்கால பட்ஜெட்டில் அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்காக ரூ.2 ஆயிரத்து 329.15 கோடியும், தேசிய இடைநிலை கல்வி இயக்கத்துக்காக ரூ.1,139.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய முன்னோடி நடவடிக்கைகள் மூலம் பள்ளிக்கல்வியில் நாட்டிலேயே மிகச்சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கும் என்று நம்புகிறேன்.
உயர்கல்வியில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை திரும்ப வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 609 மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 544 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மாணவர்களின் நிதிச்சுமை நீக்கப்பட்டது. தொடர்ந்து இந்த திட்டத்திற்கு இடைக்கால பட்ஜெட்டிலும் ரூ.579 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மாநில சமூக வளர்ச்சியில் உயர்கல்வியின் முக்கியத்துவதை உணர்ந்து இடைக்கால பட்ஜெட்டில் ரூ.3 ஆயிரத்து 821 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.