தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தராக தங்கசாமி நியமனம்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக தங்கசாமி நியமிக்கப்பட்டு நேற்று பதவி ஏற்றார்.
புதிய துணைவேந்தர்
இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றிய ஜி.விஸ்வநாதன் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையொட்டி புதிய துணைவேந்தராக எஸ்.தங்கசாமியை கவர்னர் கே.ரோசய்யா நியமித்தார். எஸ்.தங்கசாமி நேற்று புதிய துணைவேந்தராக பதவி ஏற்றார்.
அவருக்கு சென்னை பல்கலைக்கழக மாணவர்சேர்க்கை டீன் பேராசிரியர் வீரமணி உள்பட பலர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
எஸ்.தங்கசாமியின் சொந்த ஊர் தேனி மாவட்டம் கோகிலாபுரம். தனது ஊர்பெயரைக்கொண்டு கோகிலா தங்கசாமி என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். இவருடைய மனைவி பெயர் செல்வமணி. ஒரு மகனும், ஒருமகளும் உள்ளனர்.
படிப்பு
எஸ்.தங்கசாமி பி.எஸ்சி. வேதியியல் படிப்பை உத்தமபாளையத்திலும் பி.எட். மற்றும் எம்.எட். படிப்பை கோவை பெரிய நாயக்கன் பாளையத்திலும், பிஎச்.டி. என்ற ஆராய்ச்சி படிப்பை திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்திலும் படித்தார்.
அவர் தனியார் பி.எட். கல்லூரியில் முதல்வராக பணியாற்றினார். பிறகு அவர் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறை தலைவராகவும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கல்வி ஆராய்ச்சி துறை இயக்குனராகவும் பணியாற்றினார்.
சி.பா.ஆதித்தனார் விருது
தேனி மாவட்டத்தில் குழந்தைகள் கல்வி மேம்பாட்டுக்காக பணியாற்றியதற்காக சி.பா.ஆதித்தனார் விருதும் பெற்றிருக்கிறார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினராகவும், நெல்லை மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்தார்.
10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பாடத்திட்ட குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். பல்கலைக்கழக நிதிக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
50-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றி உள்ளார். சிறந்த நூலை இயற்றியதற்காக தமிழக அரசின் விருதை பெற்றிருக்கிறார்.
6 துணைவேந்தர் இடம் காலி
தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், கொடைக் கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய 6 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாகக்கிடக்கின்றன.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.