மக்கள் தொகை பதிவு பணியில் ஆசிரியர்கள்: பள்ளி வேலை நேரத்தில் ஈடுபடுத்தவில்லை
'ஆதார் எண்களை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டுடன் இணைக்கும் பணியில், பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்தவில்லை' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் பேரவை பொதுச் செயலர் பாலசந்தர் தாக்கல் செய்த பொதுநல மனு:'ஆதார்' எண்களை தேசிய மக்கள் தொகை பதிவேடுடன் (என்.பி.ஆர்.,) இணைக்கும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கிறது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, ஆசிரியர்களை கல்விசாராத பணியில் ஈடுபடுத்தக்கூடாது. என்.பி.ஆர்., பணியால், பள்ளி வேலைநாட்கள் மேலும் குறையும்.'ஆதார்' எண்ணை, என்.பி.ஆருடன் இணைக்கும் பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, பாலசந்தர் மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் கொண்ட அமர்வு விசாரித்தது. மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார்.
அரசு வக்கீல்கள் வாதம்:தமிழக அரசு சிறப்பு வழக்கறிஞர் சண்முகநாதன்: 2011 ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆதாருடன், மக்கள் தொகை பதிவை இணைக்கும் பணி நடக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு, இயற்கை பேரிடர் மீட்பு, தேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த சட்டத்தில் இடமுண்டு. தற்போது, பள்ளி வேலை நேரத்தில் மக்கள் தொகை பதிவேட்டுப் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்தவில்லை
மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சாமிநாதன்: விடுமுறை நாட்கள் மற்றும் பள்ளி வேலை நேரம் முடிந்த பின்தான், மக்கள் தொகை பதிவேட்டு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இதற்கு சட்டத்தில் வழிவகை உண்டு. இவ்வாறு வாதிட்டனர்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.