தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் உள்பட 11 பேர் உறுப்பினர்களாக நியமனம்; தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி.) ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் உள்பட 11 பேர் புதிய உறுப்பினர்களாக நியமனம் செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
11 காலிப்பணியிடம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.) ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், கடந்த சில மாதங்களாக 10 உறுப்பினர்களின் இடங்கள் காலியாக இருந்தது. இந்த நிலையில், நேற்றுடன் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவரும், உறுப்பினருமான பாலசுப்பிரமணியன் பணி ஓய்வு பெற்றார். இதனால், காலி இடங்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
செல்வமணி, பன்னீர்செல்வம், குப்புசாமி ஆகிய 3 பேர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். இந்த நிலையில், காலியாக உள்ள 11 உறுப்பினர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கவர்னர் கே.ரோசய்யா உத்தரவு பிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக இருந்த 11 பணியிடங்களுக்கும் நேற்று உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்தது. இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கவர்னர் நியமித்தார்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய உறுப்பினர்களை கவர்னர் நியமித்துள்ளார். புதிதாக நியமிக்கப்படும் உறுப்பினர்கள் பதவியேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பதவியில் இருப்பார்கள்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 உறுப்பினர்கள் விவரம் வருமாறு:-
ஆர்.பிரதாப் குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன், ஏ.வி.பாலுசாமி, எம்.மாடசாமி, வி.ராமமூர்த்தி, பி.கிருஷ்ணகுமார், ஏ.சுப்பிரமணியன், என்.பி.புண்ணியமூர்த்தி, மு.ராஜாராம் ஐ.ஏ.எஸ். (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர்).
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 உறுப்பினர்களும் வரும் புதன்கிழமை பதவி ஏற்பார்கள் என தெரிகிறது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.