ஊழியர்கள் போராட்டத்தில் அரசின் அணுகுமுறை சரியா?
கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். அவர்களது போராட்டத்தை, அரசியல் என்கிறது ஒரு தரப்பு. பிரச்னையை திசை திருப்ப ஊழியர்கள் மீது, அரசே, அரசியல் சாயம் பூசுகிறது என மறு தரப்பு சொல்கிறது. இதுபற்றி, நேர் எதிர் கருத்துக்கள்:
அரசு ஊழியர்கள், அரசியல் பாதையைத் தேர்வு செய்ய முடியாது. நடத்தை விதிகள், அதற்கு தடை விதிக்கின்றன. தொழிற் சங்கங்கள் அரசியல் கட்சிகளின் ஒரு பிரிவாக இருக்கலாம். ஆனால், அரசு ஊழியர் சங்கங்கள் அப்படியல்ல.சில ஊழியர் சங்கங்கள், அரசியல் கட்சிகளின் விருப்பத்துக்காக போராட்டத்தில் ஈடுபடுகின்றன; அதை ஏற்க முடியாது. புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை அதிகரிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை, அரசு கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டுள்ளது.
இதற்காக, ஊழியர் சங்கங்களை அழைத்துப் பேசுகிறது. இதுவே, ஏற்கக்கூடிய, மகிழ வேண்டிய நிகழ்வு தான். அரசின் இந்த முயற்சியை ஏற்காமல், சில சங்கங்கள், ஊழியர்களை திசை திருப்பும் வகையில் செயல்படுவது ஏற்புடையதல்ல.
கடந்த நான்கு ஆண்டுகளாக, அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அமைச்சரவை கூடி, கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டவற்றை, செயல்படுத்த அரசு முடிவெடுக்கும்.இந்நிலையில், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அரசை மிரட்டி காரியம் செய்யலாம் என்ற போக்கு சரியல்ல. சண்முகராஜன்மாநிலத் தலைவர்,தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்
எங்களது போராட்டம், 1991 முதல் நடக்கிறது; தேர்தலை முன்னிட்டு நடத்துவது அல்ல. புதிய ஓய்வூதியத் திட்டம், பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் விவாதித்து, நிறைவேற்றாத நிலையில், 2003 ஏப்ரல் மாதம், நிர்வாக அனுமதி மூலம், அப்போதைய அ.தி.மு.க., அரசு அமல்படுத்தியது. இதே, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், பார்லிமென்டில், புதிய ஓய்வூதிய திட்டம் மசோதா கொண்டு வந்தபோது, அதை எதிர்த்து ஓட்டளித்தனர். 2011ல், இக்கோரிக்கையை வலியுறுத்தியபோது, தி.மு.க., அரசு எங்களை ஒடுக்க முற்பட்டது. அதற்கு கண்டனம் தெரிவித்த ஜெயலலிதா, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம்' என்றார்; தேர்தல் வாக்குறுதியும் கொடுத்தார்.
ஆனால், நான்கு ஆண்டுகளாக எதையும் கண்டு கொள்ளாமல், தேர்தல் வருகிறது என, தப்பிக்க நினைக்கின்றனர். எனவே, அரசு ஊழியர் போராட்டத்தில், அரசியலை கலக்க முயற்சிக்கின்றனர். எங்களின் ஓய்வுக்கு பின் கொடுப்பதற்காக, அரசு பிடித்தம் செய்த பணம் எங்கே என கேட்டால், பதில் இல்லை. பணத்தையும் பிடித்தம் செய்துவிட்டு, ஓய்வு பெறும் ஊழியர்களையும் நடுத்தெருவில் அரசு நிற்க வைக்கிறது.பதில் சொல்ல வேண்டிய அரசு, பழியை அரசு ஊழியர்கள் மீது திருப்புவது முறையல்ல.தமிழ்செல்விமாநிலத் தலைவர்,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.