பிளஸ் 2 வரை இலவச கல்வி அவசியம் : ஐகோர்ட் நீதிபதி வலியுறுத்தல்
இலவச கல்வி பெறும் உத்தரவாதத்தை, பிளஸ் 2 வரை வழங்க வேண்டும்,'' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்து உள்ளார்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நியமனங்கள் செய்வது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட, இரண்டு அரசாணைகளை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டன.
இந்த அரசாணைகளை ரத்து செய்து, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவில்
கூறியிருப்பதாவது:இந்திய சமூகத்தில், பெரும்பாலான மக்களுக்கு, கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஒருவர் விரும்பினாலும், இல்லையென்றாலும், அதை மறுக்க முடியாது. ஆயிரம் ஆண்டுகளாக, இங்கு ஜாதிய முறை இருந்து வருகிறது.கல்வியின் முக்கியத்துவத்தை, நம் இலக்கியங்கள் வலியுறுத்தி உள்ளன. கல்விக்காக, திருவள்ளுவர், நான்கு அத்தியாயங்களாக, 40 குறள்கள் எழுதி உள்ளார். 'கல்வி செல்வத்தை யாராலும் அழிக்க முடியாது' என, கூறியுள்ளார்.
நம் அரசியல் சட்டத்திலும், கல்வி, முக்கிய இடத்தை வகிக்கிறது. தற்போது, தனியார் கல்வி நிறுவனங்கள், காளான்கள் போல் முளைத்து விட்டன. தனியார் கல்வி நிறுவனங்களில், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு, இட ஒதுக்கீடு வழங்க, அரசியல் சட்டம் வகை செய்துள்ளது.ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், '14 வயது வரையில், இலவச கல்வியை பெறும் அடிப்படை உரிமை உள்ளது' என, கூறப்பட்டுள்ளது. 14 வயது வரை, இலவச கல்வி பெறும் உரிமை, அரசியல் சட்டத்திலும் வகை செய்யப்பட்டு உள்ளது.
பள்ளி கல்வி என்பது, பிளஸ் 2 வரையிலானது. உயர் கல்வியான கல்லுாரி படிப்பு பற்றி, அரசியல் சட்டத்தில் நமக்கு உத்தரவாதம் வழங்கவில்லை.எனவே, பள்ளி கல்வி முழுவதும், அதாவது, பிளஸ் 2 வரை கல்வி வழங்க உத்தரவாதம் அளிக்க வேண்டியது, மாநில அரசின் கடமை என, நான் கருதுகிறேன். ஏனென்றால், பிளஸ் 2 படிப்பும், பள்ளி கல்வியின் கீழ் தான்
வருகிறது.இவ்வாறு நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்துள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.