ஆள்மாறாட்டம் செய்து 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பணியில் சேர்ந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ஆள்மாறாட்டம் செய்து 25 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி பணியில் சேர்ந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அந்த பணியை வழங்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி பல்லடம் ரோடு முனிசிபல் காலனி ரங்கன் மகள் ஆர்.பார்வதி. இவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–
நகராட்சி வேலை
துடியலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் என் பெயரை பதிவு செய்துள்ளேன். இந்த நிலையில், 1990–ம் ஆண்டு அக்டோபர் 26–ந்தேதி வேலை வாய்ப்பு அலுவலக பரிந்துரையின்படி, பொள்ளாட்சி நகராட்சி கடைநிலை பெண் ஊழியர் பணிக்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டேன். எனக்கு பணி நியமன உத்தரவு எதுவும் வரவில்லை.
இதையடுத்து 1993–ம் ஆண்டு வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க சென்றபோது, எனக்கு பொள்ளாட்சி நகராட்சி அலுவலகத்தில் அரசு வேலை வழங்கப்பட்டு விட்டதாகவும், அதனால் பதிவை புதுப்பிக்க முடியாது என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.
ஆள்மாறாட்டம்
அதிர்ச்சியடைந்த நான், பொள்ளாட்சி நகராட்சியில் விசாரித்தபோது, அந்த நகராட்சியில் கவுன்சிலரான பழனிச்சாமி, ஆள்மாறாட்டம் செய்து, எனது வேலையை அவரது மனைவி பி.பார்வதிக்கு பெற்றுக்கொடுத்தது தெரியவந்தது. இதற்காக சில ஆவணங்களையும் அவர் திருத்தியுள்ளார். இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ‘மனுதாரரின் பெயரில் ஆவணங்கள் தயாரித்து பி.பார்வதி என்பவர் வேலை பெற்றுள்ளார். எனவே, பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு பணி வழங்கவேண்டும்’ என்று கடந்த 2012–ம் ஆண்டு உத்தரவிட்டார்.
ரூ.10 ஆயிரம் அபராதம்
இந்த உத்தரவை எதிர்த்து பி.பார்வதி, சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
இந்த வழக்கில் கவுன்சிலரின் மனைவியான பி.பார்வதி, பெயர் ஒற்றுமையைப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. பிறந்த தேதி, தந்தையின் பெயரை ஆவணங்களில் திருத்தியதும் ஊர்ஜிதமாகியுள்ளது.
தெரிந்தே ஆள்மாறாட்டம் செய்து, உண்மையை மறைத்து இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல்செய்துள்ள பி.பார்வதிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம். இந்த தொகையை மறுவாழ்வு மையத்திற்கு அவர் செலுத்த வேண்டும்.
கண்டனம்
ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட பி.பார்வதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். தெரிந்தே மிகப்பெரிய தவறை பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகமும் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே பாதிக்கப்பட்ட ஆர்.பார்வதிக்கு உடனடியாக பணிவழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.