40 வயதுக்கு மேல் வழக்கறிஞராக பதிவா? சட்டப்படிப்பை சரிபார்க்க ஐகோர்ட் உத்தரவு
பார் கவுன்சிலில் பதிவு செய்ய, 40 வயதை தாண்டியவர்கள் விண்ணப்பித்தால் அவர்களின் சட்டப்படிப்பை சரிபார்க்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூரைச் சேர்ந்தவர், ராமு; வேளாண் பொறியியல் துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றினார். முழுநேர அரசு ஊழியராக, 1966 முதல், 2001 அக்டோபர் வரை இருந்தார்.
பெங்களூரில், தனியார் சட்டக் கல்லுாரியில், 1998 - 2001ல், சட்டப் படிப்பு முடித்தார். பணி ஓய்வுக்குப் பின், பார் கவுன்சிலில் பதிவு செய்வதற்காக, விண்ணப்பித்தார். வேலை பற்றிய விவரங்களை, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பணியில் இருக்கும் நிலையில், எப்படி சட்டப் படிப்பு படித்திருக்க முடியும் என, பார் கவுன்சில் கேள்வி எழுப்பியது. அதற்கு, கல்லுாரியில் படிப்பதற்காக, அரசு பணியில் விடுமுறை எடுத்ததாக பதில் அளித்தார். ஆனால், விவரங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து, விடுமுறை எடுத்து கல்லுாரியில் தினசரி வகுப்புக்கு சென்றதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி, பார் கவுன்சில் கேட்டது. விவரங்களை, தாக்கல் செய்யாததால் விண்ணப்பத்தை பார் கவுன்சில் நிராகரித்தது.
பார் கவுன்சில் விதிகளை எதிர்த்தும், வழக்கறிஞராக பதிவு செய்யும் பொறுப்பை, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் எடுத்து கொள்ள உத்தரவிட கோரியும், உயர் நீதிமன்றத்தில் ராமு மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், என்.கிருபாகரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
முழுநேர அரசு பணியில் இருந்தபடி, அதே நேரத்தில் சட்டப் படிப்பையும் எப்படி முடிக்கின்றனர் என்பதை, இந்த வழக்கு வெளிப்படுத்துகிறது. எந்த சூழ்நிலையில், மனுதாரர், சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார் என்பது சந்தேகமாக உள்ளது.
பார் கவுன்சில், 'நோட்டீஸ்' அனுப்பியும், பெங்களூரு கல்லுாரியில் வகுப்புக்கு வந்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. முறையான ஆவணங்கள் இல்லாமல் பார் கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது. 'லெட்டர் பேடு' கல்லுாரிகள், சட்டப் படிப்புகளை விற்பனை செய்கின்றன. இதை, பார் கவுன்சில் பார்த்து கொண்டு இருக்கிறது. இதை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கிரிமினல்களும், விரும்பத்தகாத சக்திகளும், இந்த துறையை கபளீகரம் செய்து விடுவர்.
பல மாநிலங்களில், 'லெட்டர் பேடு' கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. அடிப்படை தகுதி பெறாத மாணவர்களும், தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர்; சட்டத்தில் பட்டமும் வழங்கப்படுகிறது.
வழக்கறிஞர் தொழில் உன்னதமானது; வழக்கறிஞர்களுக்கு, சட்ட அறிவு இருக்க வேண்டும். சட்டப் படிப்பு முடித்தவர்கள், ஒரே இரவில், கைதேர்ந்த வழக்கறிஞராக ஆகிவிட முடியாது. மூத்த வழக்கறிஞரிடம் பயிற்சி பெறாதவர்களை, முழுமையான வழக்கறிஞராக கூற முடியாது.
மோசடியாக பட்டம் பெற்று, வழக்கறிஞர் தொழிலில் பலர் நுழைந்துள்ளனர். முழு நேர ஊழியராக பணியாற்றி கொண்டு, 100 கி.மீ., துாரத்துக்கு அப்பால் இயங்கும் கல்லுாரியில் படித்ததாக கூறுகின்றனர். எனவே, மோசடியாக பட்டம் பெறுபவர்களை, வழக்கறிஞராக பதிவு செய்யும் போதே, வடிகட்ட வேண்டும்.
40 வயதை கடந்தவர்கள், பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ய விண்ணப்பிக்கும் போது, அவர்கள் முறையாக பட்டம் பெற்றவர்களா, இல்லையா என்பதை, பார் கவுன்சில் சரிபார்க்க வேண்டும்
வழக்கறிஞராக பதிவு செய்யும் போது, ரேஷன் கார்டு , 'பான் கார்டு', ஆதார் அட்டையை சரிபார்க்க வேண்டும். அதன் மூலம் முகவரி, சமூக அந்தஸ்து, வருமானத்தை கண்டுபிடிக்கலாம்
பணியில் இருக்கும் போது, சட்டப் படிப்பில் பட்டம் பெறவில்லை என, 40 வயதை கடந்தவர்கள் விண்ணப்பிக்கும் போது, அவர்களிடம் மனு பெற வேண்டும். இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.