அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் தேவையற்ற சந்தேகத்தால் தேர்வர்கள் குழப்பம்
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் தேர்வர்களுக்கு தேவையற்ற சந்தேகம் ஏற்பட்டு குழப்பத்தில் உள்ளனர்.
அரசு பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசு துறைகளில் ஏற்படும் காலி இடங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நிரப்பி வருகிறது. தேர்வாணையம் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகளை நடத்தி ஆட்களை தேர்ந்து எடுக்கிறது. சில பணிகளுக்கு எழுத்து தேர்வு மட்டும் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்றாலே தேர்வுகளின் முடிவுகளை தாமதமாக வெளியிடுகிறது என்று பெரும்பாலான தேர்வு எழுதிய தேர்வர்களுக்கும், பொதுமக்களுக்கும் எண்ணமாக உள்ளது.
குரூப்–1 முதல் நிலை தேர்வு
கடந்த நவம்பர் 8–ந்தேதி குரூப்–1 முதல் நிலை தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இந்த தேர்வு 74 பணியிடங்களுக்கு நடத்தப்பட்டது. 2 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள் மொழி தெரிவித்தார்.
ஆனால் தேர்வு எழுதியவர்களில் சிலர் கூறியதாவது:–
சந்தேகத்தால் தேர்வர்கள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வெளியிடப்படும் தேர்வு முடிவுகள் தாமதமாகத்தான் வெளியிடப்படுகின்றன. எனவே தேர்வர்கள் நேர்முகத்தேர்வின் போது அல்லது தேர்வு எழுதிய பதிவு எண்ணை கொடுத்து தேர்வாணைய அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் அல்லது சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் சிபாரிசு செய்தால் முடிவு வெளியிடும்போது பெயர் வரும் என்று தேர்வர்களில் சிலர் நம்புகிறார்கள். இந்த தேவையற்ற சந்தேகத்தால் தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
எனவே இந்த சந்தேகத்தை போக்கும் வகையில் தேர்வாணையம் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடவேண்டும்.
3 ஆண்டுகளாக முடிவு வெளியிடப்படவில்லை
உதாரணமாக கடந்த 2014–ம் ஆண்டு குரூப்–1 தேர்வுக்கு அறிக்கை விடப்பட்டு முதல்நிலை தேர்வு 2014–ம் வருடம் ஜூலை மாதம் 20–ந்தேதியும், மெயின் தேர்வு 2015–ம் வருடம் ஜூன் மாதம் 5–ந்தேதியும் நடத்தப்பட்டன. கடந்த மார்ச் மாதத்தில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இன்னும் தேர்வின்இறுதி முடிவு வெளியிடப்படவில்லை.
தற்போது 3–வது ஆண்டு நடக்கும் போதுகூட தேர்வாணையத்தால் தேர்வு முடிவை வெளியிட முடியவில்லை. அதற்கு அடுத்து ஒரு குரூப்–1 முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டு முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இப்படி எத்தனையோ தேர்வுகள் அறிவிக்கப்படவில்லை. இப்படி காலதாமதமாக முடிவை வெளியிடுவதால் எங்களுக்கு வயது வரம்பு போய்விடுகிறது. எனவே அனைத்து தேர்வுகளின் முடிவையும் விரைவில் வெளியிடவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.